எப்போ வேணும்னாலும் ஜோசப் குருவில்லா, விஜயகுமாரா மாறி தெறிக்கவிடுவாரு: கெயில் பற்றி கோஹ்லி
பெங்களூர்: கிறிஸ் கெயில் மோசமாக ஆடிவருவது குறித்து கவலைப்படவில்லை என்றும், அவர் எப்போது வேண்டுமானாலும் சதம் அடிக்க கூடிய வீரர் என்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
பெங்களூர் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெயில், நடப்பு ஐபிஎல் சீசனில் சோபிக்க தவறி வருகிறார். முதல் போட்டியில் 1 ரன் எடுத்த கெயில், நேற்று நடைபெற்ற 2வது போட்டியில் டக்-அவுட் ஆனார்.
உலக கோப்பை டி20 தொடரில் இருந்து கணக்கெடுத்து பார்த்தால், கிறிஸ் கெயில், தொடர்ச்சியாக 5 போட்டிகளில் இரட்டை இலக்க ரன்களை கூட தொடர முடியவில்லை.

17 சதம்
இதுகுறித்து நேற்றைய போட்டிக்கு பிறகு கோஹ்லி கூறியதாவது: பல்வேறு வகையான டி20 கிரிக்கெட் தொடர்களில் கெயில் இதுவரை 17 சதங்களை விளாசியுள்ளார். இது ஒன்றும் ஜோக் கிடையாது.

லேசுபட்டவர் இல்லை
கெயில் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அதற்கேற்ப ரன் அடிக்கவில்லை என்றால் ஏமாற்றமடைகின்றனர். ஆனால் கெயில் சாமானிய வீரர் கிடையாது.

அடிப்பாருய்யா சதம்
அடுத்த போட்டியிலேயே கூட கெயில் சதம் அடிக்க முடியும். அந்த திறமை கெயிலுக்கு உள்ளது. எனவே கெயில் ரன் குவிக்காதது எனக்கு ஒரு பெரிய விஷயமாகவே படவில்லை.

பிறர் விளாசுகிறார்கள்
கிறிஸ் கெயில் ரன் எடுக்காவிட்டாலும் பிற வீரர்கள் அபாரமாக பங்களித்து வருகிறார்கள். முதல் போட்டியில் 227 ரன்கள் எடுத்ததும், இரண்டாவது போட்டியில் 191 ரன்கள் குவித்ததும், பிற பேட்ஸ்மேன்களின் பங்களிப்பால்தான்.

அவரும் அடிச்சா அவ்ளோதான்
கிறிஸ் கெயில் ரன் குவிக்காமலேயே, பெங்களூர் அணி இமாலய ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. கெயிலும் விளாச ஆரம்பித்தால் ஸ்கோர் எப்படி எகிறும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

நாங்க நாலு சிங்கம்
பெங்களூர் அணியில் கெயில், டிவில்லியர்ஸ், வாட்சன் மற்றும் நான் உலக தரம்மிக்க பேட்ஸ்மேன்களாக பார்க்கப்படுகிறோம். நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்தால் எத்தனை பெரிய ஸ்கோரையும் குவிக்க முடியும்.

அது ஒரு நல்ல ஆட்டம்
டெல்லி அணியின் டிகாக் சிறப்பாக ஆடி வெற்றியை எங்களிடமிருந்து பறித்துள்ளார். அவர் ஸ்பின் பந்துகளை சிறப்பாக கையாண்டார். விக்கெட் கீப்பரான அவருக்கு, பிட்சில் பந்து வரும் வேகத்தை கவனித்து கணிப்பது எளிதான விஷயமாக இருந்திருக்கும். இவ்வாறு கோஹ்லி தெரிவித்தார்.

தெறி சீசன்
சமீபத்தில் திரைக்கு வந்த தெறி திரைப்படத்தில் அப்பாவி ஜோசப் குருவில்லா, மீண்டும் விஜயகுமாராக மாறி ருத்ரதாண்டவம் ஆடுவதுதான் கோஹ்லி பேட்டியை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications