மழையில் மேட்ச் நின்னுபோச்சா.. அவ்வளவு தான்..! மறுபடியும் நடத்த மாட்டோம்..! ஐசிசி கறார்
லண்டன்:உலக கோப்பை தொடரில் மழையால் பாதிக்கப்படும் ஆட்டங்களை மாற்று நாட்களில் நடத்த முடியாது என்று ஐசிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இலங்கை, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது.
தென் ஆப்ரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 7.3 ஓவர்கள் விளையாடியநிலையில், மழையால் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக அதிக ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது நடப்பு உலக கோப்பை போட்டியில் தான்.

தொடர் மழையால் தாமதம்
தற்போது இந்த தொடரில் முக்கிய போட்டியாக கருதப்படும் இந்தியா, நியூசி லாந்து அணிகள் மோதும் ஆட்டமும் மழையால் தாமதமானது. அவுட் பீல்டு பகுதி முழுவதும் ஈரமாக இருப்பதாக நடுவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த தகவல் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.

ஐசிசி திட்டவட்டம்
மழையால் ரத்தாகும் லீக் போட்டிகளை மாற்று நாள் அதாவது ரிசர்வ் டே என்று அழைக்கப்படும் அடுத்த நாளில் எதுவும் நடத்த முடியாது என்று ஐசிசி திட்ட வட்டமாக கூறியுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்று நாள் உண்டு.

வேண்டுகோள் நிராகரிப்பு
லீக் சுற்று ஆட்டங்களுக்கும் மாற்று நாள் அளிக்க வேண்டும் என்று வங்கதேச பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் உள்பட பலரும் ஐசிசியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மறுத்துள்ளது.

சிக்கல் அதிகரிக்கும்
அதற்கு பல காரணங்களை ஐசிசி முன் வைத்துள்ளது. ஐசிசி கூறியிருப்பதாவது: மாற்றுநாள் என்றால் போட்டியின் நேரம் அதிகரிக்கும். இந்த விவகாரம் மிகவும் சிக்கலான ஒன்று. அதிக பணியாளர்கள் தேவைப்படுவார்கள்.

முடியவே முடியாது
மாற்று நாளில் மழை பெய்யாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது. மேலும் தற்போது நிலவி வரும் வானிலை, இந்தப் பருவத்துடன் தொடர்பில்லாத வகையில் உள்ளது. அதனால் மாற்று நாட்களில் ரத்தான அல்லது கைவிடப்பட்ட உலக கோப்பை போட்டிகளை நடத்த முடியாது என்று காரணங்களை அடுக்கியிருக்கிறது ஐசிசி.


Click it and Unblock the Notifications