“வேணும் ஆனா வேணாம்”.. நியூசி, உடனான முதல் ஒருநாள் போட்டி.. ரோகித்-க்கு தலைவலியை தந்த இளம் வீரர்கள்!
மும்பை: நியூசிலாந்து அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய குழப்பத்தில் சிக்கியுள்ளார், அவரின் முடிவுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியானது நடைபெறவுள்ளது. இலங்கை அணியை 3 - 0 என ஒயிட் வாஷ் செய்து அசத்திய இந்தியா, அதே ஃபார்மை நியூசிலாந்திடமும் காட்ட முணைப்பு காட்டி வருகிறது.

புதிய சிக்கல்
இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் சிக்கல் உண்டாகியுள்ளது. அணியின் சீனியர் வீரரான கே.எல்.ராகுல் நியூசிலாந்து தொடரில் இடம்பெறவில்லை. திருமணம் நடைபெறவிருப்பதால் அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் இல்லாத சமயத்தில் இலங்கை தொடரில் கே.எல்.ராகுல் தான் விக்கெட் கீப்பிங் செய்தார். ஆனால் நியூசிலாந்து தொடரில் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு இஷான் கிஷான் தான் முதன்மை தேர்வாக இருக்கிறார்.

கில் தரும் அழுத்தம்
இடதுகை வீரர் இஷான் கிஷான் ஓப்பனிங் வீரர் ஆவார். சமீபத்தில் இரட்டைசதம் அடித்து அசத்தியிருந்தார். மறுபுறம் சுப்மன் கில் தான் ரோகித்தின் முதன்மை தேர்வாக இருக்கிறார். இலங்கை தொடரில் சதத்தை விளாசி தனது பலத்தை அதிகரித்துக்கொண்டார். சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடியவர் தான். ஆனால் அவரின் இடத்தை மாற்றி ரிஸ்க் எடுக்க ரோகித் விரும்பவில்லை. எனினும் விக்கெட் கீப்பர் தேவை என்றால் இஷானும் தேவை.

மாற்று விக்கெட் கீப்பர்
இதன் காரணமாக அணியில் ஓப்பனிங்கில் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரையுமே விட்டுக்கொடுக்க முடியாத சிக்கலில் ரோகித் சர்மா சிக்கியுள்ளார். கே.எல்.ராகுலுக்கு மாற்று விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத்-ம் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் அவருக்கு உடனடியாக வாய்ப்பு தருவது சிரமம் தான்.

தயாராக இருக்கனும்
இதனால் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவருமே ப்ளேயிங் 11ல் இடம்பெற்றாக வேண்டும். ஆனால் யாராவது ஒருவர் மிடில் ஆர்டரில் 5வது வீரராக களமிறங்க தயாராக இருக்க வேண்டும். இதனை ரோகித் சர்மா எப்படி சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications