அபுதாபி: ஐ.பி.எல். தொடர் வரலாற்றில் மிக மோசமாக விளையாடி 15 ஓவர்களில் 70 ரன்களுக்குள் சுருண்டு போனது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
7வது ஐ.பி.எல். போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
பேட்டிங் செய்ய வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டக்வாலே முதல் ஓவரிலேயே 1 ரன் எடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்தில் படேல் அவுட் ஆனார். 2வது ஓவரில் அந்த அணி 5 ரன்கள் எடுத்த நிலையில் ரூ14 கோடி விலைக்கு வாங்கப்பட்ட யுவராஜ்சிங் அவுட் ஆனார்.
டிவில்லியர்ஸ் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆனார். அந்த அணியில் கேப்டன் கோஹ்லி மட்டும் 25 பந்துகளை எதிர்கொண்டு 21 ரன்களை எடுத்தார். ஸ்டார்க் 18 ரன்களையும் ராம்பால் 13 ரன்களையும் எடுத்திருந்தனர். 15 வது ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்களை மட்டுமே பெங்களூர் அணி எடுத்திருந்தது.
ஐ.பி.எல். வரலாற்றிலேயே மிகக் குறைந்த ஸ்கோர் பட்டியலில் 3வது ரன் குவிப்பு இது. இதற்கு முன்பு 2009ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ்- பெங்களூர் இடையேயான போட்டியில் 58 ரன்களும் 2008ல் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில் 67 ரன்களும் எடுக்கப்பட்டிருந்தது.