ஐபிஎல் மினி ஏலம்
டி20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே கலக்கிய சாம் கரண், தொடர் நாயகன் விருதை பெற்றார். இதனையடுத்து பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே கடும் யுத்தம் நடைபெற, இறுதியில் பஞ்சாப் அணி அவரை ரூ. 18.50 கோடிக்கு ஏலம் எடுத்து ஆச்சரியம் தந்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
பழைய சாதனை
கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கிறிஸ் மோரிஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது சாம் கரணுடன் சேர்த்து, கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸும் புதிய ரெக்கார்ட்-ஐ பதிவு செய்தனர். கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பையும், பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணியும் வாங்கியது.
சாம் கரண் ஓபன் டாக்
இந்நிலையில் இந்த மகிழ்ச்சி தருணம் குறித்து சாம் கரண் பேசியுள்ளார். அதில், நேற்று இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. ஐபிஎல் ஏலத்தில் நான் எந்த அணிக்கு செல்லப்போகிறேன், என்ன நடக்கப்போகிறது என்ற பதற்றத்திலேயே இருந்தேன். எனினும் எனது செயல்பாடுக்கான அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வளவு தொகை வரும் என எதிர்பார்க்கவே இல்லை.
மீண்டும் அதே அணி
சாம் கரண் 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கியது பஞ்சாப் அணியில் இருந்து தான். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், எங்கு தொடங்கியதோ, அங்கு மீண்டும் சென்றது ஆச்சரியமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் அங்கு எனது சக வீரர்கள் ஜானி பேரிஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டனுடன் சேர்ந்து விளையாடுவதை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளேன் என சாம் கரண் பேசியுள்ளார்.