நம்பிக்கை இல்லாத அணி
சௌரவ் கங்குலி இந்திய அணிக்கு கேப்டன் ஆகும் முன் இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கிய சில வீரர்களால் மொத்த அணியும் நிலை குலைந்து இருந்தது. வெளிநாட்டு போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கூட இல்லாமல் இருந்தது.
இளம் வீரர்கள்
அப்போது கங்குலி நல்ல திறமையான வீரர்களை ஆதரித்து அவர்களுக்கு ஏற்ற இடங்களில் பேட்டிங் செய்வது, பந்துவீசுவது உள்ளிட்ட விஷயங்களை கவனித்தார். இளம் வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்தார். அதற்கு அப்போது ஜக்மோகன் டால்மியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இருந்த பிசிசிஐ முழு அளவில் உதவி செய்தது.
கங்குலி உருவாக்கிய அணி
கங்குலி உருவாக்கிய வீரர்கள் தான் பின்னாட்களில் அவர் அணியில் இல்லாத போதும் பல வெற்றிகளை குவித்தனர். கங்குலி வீரர்களை உருவாக்கியது மட்டுமின்றி, போராடும் குணத்தையும் உண்டாக்கினார். அதன் காரணமாகவே இந்தியா வெளிநாடுகளில் வெற்றி பெறத் துவங்கியது.
புரட்சிகரமான முடிவுகள்
அப்போது கங்குலி பல புரட்சிகரமான முடிவுகளையும் எடுத்தார். முக்கியமான போட்டிகளில் திடீரென பேட்டிங் வரிசையை மாற்றுவது அவரின் சிறப்பு என்றே சொல்லலாம். மற்ற வீரர்களுக்காக தன் பேட்டிங் வரிசையையும் விட்டுக் கொடுக்கத் தயங்காதவர்.
கடினமான அணியாக மாற்றினார்
இந்த நிலையில், நாசிர் ஹுசைன் கங்குலி பற்றி கூறுகையில், "சௌரவ் தான் இந்திய அணியை ஆக்ரோஷமான அணியாக மாற்றினார். கடினமான அணியாக மாற்றினார். அவர் கேப்டனாக இருந்த போது நாம் பெரிய யுத்தத்தில் இருப்பதாக உணருவீர்கள்" என்றார்.
இந்திய கிரிக்கெட்டில் புரட்சி
மேலும், "ஒரு கேப்டனாக இந்திய கிரிக்கெட்டில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பதால் அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உள்ளது." எனவும் குறிப்பிட்டு கங்குலியை பாராட்டினார் நாசிர் ஹுசைன். கங்குலிக்கு அடுத்து விராட் கோலி அதே போல இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விராட் கோலி
"விராட் கோலி பெரிய அளவில் போராடும் கிரிக்கெட் வீரர். அவர் களத்துக்கு வந்தால் வெற்றி பெற வேண்டும் என விரும்புவார். வெற்றிக்காக போராடுவார்" என விராட் கோலி கேப்டன்சி பற்றி குறிப்பிட்டார் நாசிர் ஹுசைன்.