சர்வதேச ஒருநாள் போட்டிகள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கை குலுக்க மாட்டோம் என்று கூறி விட்டனர். ஆனால் ஆஸ்திரேலிய அணியினரோ தொடர்ந்து கை குலுக்குவோம் என்று கூறி விட்டனர். இப்போது தென் ஆப்பிரிக்க அணியினரோ கை குலுக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணியினர் இந்தியாவுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
கை குலுக்கலை தவிர்ப்போம் -தெ.ஆ.
இந்த போட்டித் தொடர் குறித்தும் கொரோனா குறித்தும் அணியின் பயிற்சியாளர் மார்க் பெளச்சர் கூறுகையில், வழக்கமான கை குலுக்கலை நாங்கள் தவிர்ப்போம். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 40ஐ தொட்டுள்ளதாக அறிகிறோம். வீரர்களின் ஆரோக்கியம் மிக முக்கியம். எனவே அது தொடர்பான வழி காட்டல்களை நாங்கள் கடைப்பிடிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
வேறு வகையில் மரியாதை
கை குலுக்கலை தவிர்ப்பது நல்லது என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அதை கடைப்பிடிப்போம். அது ஒரு வகையில் நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். வீரர்கள் மற்றவர்களை மதிப்பதில் எந்த மாற்றமும் இல்லை. கை குலுக்கலுக்குப் பதிலாக வேறு வகையில் எங்களது மரியாதையை காட்டுவோம் என்றும் பௌச்சர் கூறியுள்ளார்.
பயிற்சியாளர் மார்க் பௌச்சர்
இந்தியாவுக்கு வந்து விளையாடுவதில் எந்த ஆரோக்கிய குறைபாடும் இல்லை என்று கூறப்பட்ட பின்னர்தான் அணி இங்கு வந்துள்ளது. அவர்கள் சொல்படி நாங்கள் பின்பற்றுவோம். இங்கு விளையாடுவது ஆபத்து என்று இருந்தால் நிச்சயம் அவர்கள் எங்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை என்றார் பெளச்சர்.