இந்திய அணி தோல்வி
கடின இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் ஓப்பனிங் டாப் ஆர்டர் வீரர்கள் டிக்காக் (22), தெம்பா பவுமா (10), டுவைன் பிரிட்டோரியஸ் (29) என அடுத்தடுத்து வெளியேறினர். 81 /3 என தடுமாறிய தென்னாப்பிரிக்க அணியை டேவிட் மில்லர் (64 ரன்கள்) - வாண்டர் டுசன் (75 ரன்கள் ) ஜோடி 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை தேடிக்கொடுத்தனர்.
கவாஸ்கரின் குறிப்பு
இந்த ஸ்கோரை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் சுனில் கவாஸ்கர் மட்டும் வேறுமாதிரி சிந்தித்துள்ளார். போட்டியில் வெற்றி, தோல்வி என்பது சகஜமான ஒன்று தான். ஆனால் அதன் மூலம் அணியில் ஏற்பட்ட நல்ல விஷயங்கள் என்னவென்பது குறித்து பேசியுள்ளார்.
முதல் விஷயம்
இதுகுறித்து பேசிய அவர், நேற்றைய நாளின் முதல் நல்ல விஷயம் பவர் ப்ளே தான். இந்தியாவுகு நீண்ட நாட்களாக பவர் ப்ளே சரியாக அமையாமல் உள்ளது. ஆனால் நேற்று விக்கெட் இழப்பின்றி 5 ஓவர்களில் 51 ரன்களை சேர்த்துவிட்டனர். இதற்கு காரணம் ருதுராஜ் கெயிக்வாட் - இஷான் கிஷான் ஜோடி தான்.
நிறைய தவறான ஷாட்கள்
இஷான் கிஷானுக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லை. நிறைய தவறான ஷாட்களை அடித்தார். இதனால் நிறைய அவுட்சைட் எட்ஜானது. சில நேரங்களில் பந்து பேட்டின் மையப்பகுதியில் படாதவாறு தான் வரும். ஆனால் அதனையெல்லாம் புரிந்துக்கொண்டு 70 ரன்கள் வரை வெகு விரைவாக அடித்து நொறுக்கினார். இது இந்தியாவுக்கு பெரும் பலமாகும்.
2வது பாசிட்டீவ்
இதே போல ஹர்திக் பாண்ட்யா இப்படி ஆடுவார் என நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை. லோயர் ஆர்டரில் மீண்டும் இந்திய அணிக்காக அதிரடி காட்டினார். பவுலிங்கிலும் நல்ல எதிர்காலம் தெரிந்தது. அவர் வீசிய ஒரே ஓவரில் நிறைய ரன்கள் சென்றது தான். ஆனால் நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பிய வீரரிடம் ஒரே போட்டியில் மிகவும் எதிர்பார்ப்பது தவறாகும்.
அந்த ஒரு ஷாட்
இந்திய அணி இனி எப்போது 2வது பேட்டிங் செய்கிறதோ, அப்போதெல்லாம் ஹர்திக் பாண்ட்யா முடித்துக்கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவும் நேற்று மிகவும் ஃப்ளாட்டாக அடித்த சிக்ஸரை பார்த்து பிரமிப்படைந்தேன் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.