தொடர்ந்து சொதப்பல்
ஆசிய கோப்பை தொடரில் இருந்தே கே.எல்.ராகுலின் ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ளது. அதில் இருந்து 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 6 அரைசதங்களை அடித்துள்ளார். அடுத்த 10 முறையுமே வெறும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறி இருக்கிறார். அந்த 10லும் 6 விக்கெட்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான போட்டிகளில் வந்தவை ஆகும். இதனால் அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
நடவடிக்கை
இந்நிலையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளது. இந்த தொடர் ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியில் தான் கே.எல்.ராகுல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண ஏற்பாடு
ராகுலின் ஃபார்ம் ஒருபுறம் காரணம் என கூறினாலும், மற்றொருபுறம் அவரின் திருமணத்தையும் காரணம் எனக்கூறலாம். கே.எல்.ராகுல் தனது நீண்ட நாள் காதலியான ஆதியா ஷெட்டியை ஜனவரி இறுதி வாரத்தில் கரம் பிடிக்கவுள்ளார். இதற்காக முழு தொடரில் இருந்துமே ஓய்வு தரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதே போல ரோகித் சர்மாவும் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
காரணம் என்ன
வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் போது ரோகித் சர்மாவுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இலங்கை தொடருக்குள் குணமடைந்துவிடுவார் என கூறப்பட்டு வந்த சூழலில், காயத்தின் தன்மை சற்று அதிகமாக இருப்பதால், ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. 50 ஓவர் உலகக்கோப்பைக்கு இன்னும் சிறிது காலமே இருக்கும் சூழலில் கேப்டனே தொடர்ச்சியாக ஓய்வில் இருப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.