டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில், இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில் சொந்த மண்ணில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி, முதல் முறையாக சொந்த மண்ணில் இன்று களமிறங்குகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில், இதுவரை 21 ஆட்டங்கள் முடிந்துள்ளன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 6 ஆட்டங்களிலும் மற்ற அணிகள் தலா 5 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளன. இன்று டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லியும் பஞ்சாபும் மோதுகின்றன.
டெல்லி இதுவரை 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. நான்கில் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில் பஞ்சாப் 5 ஆட்டங்களில் நான்கில் வென்றுள்ளது.
இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில், பஞ்சாப் மற்றும் சிஎஸ்கே அணிகள் மட்டுமே சொந்த மண்ணில் அனைத்து ஆட்டங்களிலும் வென்றுள்ளன. மும்பை மூன்றில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. கொல்கத்தா நான்கில் இரண்டில் வென்றுள்ளது. ராஜஸ்தான் மூன்றில் இரண்டில் வென்றுள்ளது. பெங்களூரு அணியும் மூன்றில் இரண்டில் வென்றுள்ளது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணி இந்த சீசனில் முதல் முறையாக சொந்த மண்ணில் களமிறங்குகிறது. ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. அதில் 7 சொந்த மண்ணிலும், 7 மற்ற இடங்களிலும் விளையாடும். அதன்படி, டெல்லி இன்றைய போட்டியுடன் சேர்த்து, சொந்த மண்ணில் 7 போட்டிகளிலும், மற்ற இடங்களில் 2 ஆட்டங்களிலும் விளையாட உள்ளது. சொந்த மண் அந்த அணிக்கு சாதகமாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.