மிடில் ஆர்டர் குழப்பம்
இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் சிறப்பாக உள்ளது. மிடில் ஆர்டரில் உள்ள சிக்கல் இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனால் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் அபாரமான பவுலிங்கால் இந்திய அணி வெற்றி பெறுவதால் மிடில் ஆர்டர் பிரச்னை பெரிதாக தெரிய வில்லை.
விவாதம் எழுந்தது
ஒரு கட்டத்தில் உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் நான்காம் வரிசை குறித்த பெரிய விவாதமே எழுந்தது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு ஒருவழியாக ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் பயிற்சி போட்டியில் 4ம் வரிசையில் ராகுல் சிறப்பாக ஆடியதால் முதல் சில போட்டிகளில் ராகுல் தான் 4ம் வரிசையில் ஆடினார்.
விலகிய தவான்
விஜய் சங்கருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் தவான் காயம் காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தே முழுமையாக விலகியதால் அணியில் இடம்பெற்றார் விஜய் சங்கர். ஆனால், இதுவரை ஒரு போட்டியில் கூட உருப்படியாக விளையாடவில்லை.
ரசிகர்கள் குரல்
ஆனாலும், அவரை ஆடும் லெவனில் கேப்டன் கோலி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த நடவடிக்கை பெரும் விமர்சனத்தை முன் வைக்கிறது. கேதர் ஜாதவ் மற்றும் விஜய் சங்கரை நீக்கிவிட்டு, ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்கை சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.
நீக்க முடியாது
இந் நிலையில் இது குறித்து பேசிய கேப்டன் கோலி விஜய் சங்கரை அணியில் இருந்து நீக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: விஜய் சங்கர் சிறப்பாகவே விளையாடி வருகிறார். அவர் சிறப்பான ஆட்டத்தை நெருங்கி விட்டார். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.