
வலம் வரும் யூகங்கள்
தோனி ஒருநாள் போட்டிகளில் சரியாக ஆடவில்லை எனும் பட்சத்தில் அவரை அதில் இருந்து நீக்கி இருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை. டி20 அணியில் இருந்து அவரை நீக்கியது ஒருவேளை அவருக்கு அளிக்கும் எச்சரிக்கையா? என்பது போன்ற கேள்விகள், யூகங்கள் வலம் வருகின்றன.

டி20 உலகக்கோப்பை தான் காரணம்
இதற்கான காரணம் குறித்து ஒரு பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி கருத்து கூறி இருக்கிறார். "தோனி 2019 உலகக்கோப்பை வரை இந்திய ஒருநாள் அணியில் நீடிப்பார். அதே சமயம், ஆஸ்திரேலியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை. 2019க்கு பின் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவாரா என்பது சந்தேகம் தான். அவர் டி20 உலகக்கோப்பையில் ஆடவில்லை என்றால் அவரை டி20 அணியில் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை" என கூறினார்.

ரோஹித், விராட் கோலிக்கு தெரியும்
"அதே சமயம், தேர்வாளர்கள், அணி நிர்வாகம் இந்த விஷயத்தை பற்றி தீவிரமாக யோசித்தே முடிவெடுத்து இருக்கிறார்கள். அணித் தேர்வு கூட்டத்தில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கலந்து கொண்டனர். அவர்களுக்கு தெரியாமலா இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கும் இவர்களது ஒப்புதல் இல்லாமல் தேர்வாளர்கள் முடிவெடுத்து விட முடியும் என நினைக்கிறீர்களா?" எனவும் கேட்டார் அவர்.

தோனிக்கு ஓய்வு மட்டுமே
தோனி நீக்கம் பற்றி பேசிய தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத், "இரண்டாம் கட்ட விக்கெட் கீப்பரை அடையாளம் காணும் முயற்சியாகவே தோனிக்கு இரண்டு தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது" என கூறினார். இரண்டு டி20 தொடர்களுக்கும் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய தோனி வரவேண்டும்
இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் யார் என்றால் சந்தேகமே இல்லாமல் தோனி தான். ரிஷப் பண்ட்டுக்கு போதிய அனுபவமில்லை. தினேஷ் கார்த்திக் திறனோடு ஒப்பிட்டால், தோனி பல மடங்கு சிறந்த விக்கெட் கீப்பர். பேட்டிங்கில் ரன் குவிப்பது மட்டுமே தோனியின் பலவீனமாக உள்ளது. இங்கிலாந்து உலகக்கோப்பை தொடருக்குள் அவர் பேட்டிங்கில் பார்முக்கு திரும்புவார் என தோனி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications