ஆக்லாந்து: ஜிம்பாப்வே அணியின் கேப்டன் பிரன்டன் டெய்லர், இன்று ஆக்லாந்து மைதானத்தில் வைத்து இந்தியப் பந்து வீச்சை கிழி கிழியென்று கிழித்தெடுத்து விட்டார். அவரது அதிரடி, சரவெடி பேட்டிங்குக்கு முன்பு இந்தியப் பந்து வீச்சாளர்கள் பெரும் கலவரமடைந்து விட்டனர்.
இந்த உலகக் கோப்பைப் போட்டித் தொடருடன் ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே டெய்லர் அறிவித்துள்ளார். தனது இன்றைய கடைசிப் போட்டியில் பல சாதனைகளைப் படைத்து விட்டார்.
இன்றைய போட்டியில் டெய்லரின் பேட்டிங் மிகப் பிரமாதமாக அமைந்திருந்தது, ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக இருந்தது.
ஒரு வெற்றி மட்டுமே
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வே ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வென்று அனைத்து லீக் போட்டிகளிலும் தோற்றுள்ளது. இன்றைய போட்டிதான் அதற்கு கடைசி லீக் போட்டியாகும். இப்போட்டியுடன் அது உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விடைபெறுகிறது.
கடைசிப் போட்டியில் களேபரம்
இன்றைய கடைசிப் போட்டியில் களேபரப்படுத்தி விட்டார் டெய்லர். இந்தியப் பந்து வீச்சை தவிடுபொடியாக்கிய அவர் கிடைத்த பந்தையெல்லாம் ரன் மழையாக்கி இந்திய பவுலர்களை முதல் முறையாக இந்த உலகக் கோப்பைப் போட்டியில் பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்.
அடித்த அடியைப் பார்த்தால்
டெய்லரும், சீன் வில்லியம்ஸும் விளையாடிய விதத்தைப் பார்த்தபோது ஜிம்பாப்வே அணி 300 ரன்களைத் தொட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. அந்த அளவுக்கு இந்தியப் பந்து வீச்சைப் பதம் பார்த்து விட்டது ஜிம்பாப்வே.
டெய்லர் ருத்ரதாண்டவம்
குறிப்பாக கேப்டன் டெய்லரின் ஆட்டம்தான் பேயாட்டமாக இருந்தது. ஆரம்பத்தில் சற்று கட்டையைப் போட்ட டெய்லர் பின்னர் பிரித்தெடுக்க ஆரம்பித்து விட்டார்.
சொல்லிச் சொல்லி அடி
ஜடேஜா மற்றும் அஸ்வின் பந்து வீச்சை அனாயசமாக எதிர்கொண்டு அடித்து ஆடினார் டெய்லர். இதனால் இவர்களது ஓவர்களில்தான் அதி ரன்களை அள்ளினார் டெய்லர்.
அராஜக ரன் குவிப்பு
110 பந்துகளைச் சந்தித்த டெய்லர் 138 ரன்களைக் குவித்துத்தான் ஓய்ந்தார் டெய்லர். அவர் சந்தித்த பந்துகளை விட அந்த பந்துகளுக்கு நேர்ந்த கதிதான் முக்கியமானது. ஒவ்வொரு பந்தையும் ரசித்து ரசித்து அடித்து வெளுத்தார் டெய்லர் (எந்த வேலையையும் ரசித்துச் செய்தால் அது பல சாதனைகளுக்கு வித்திடும் என்பது இங்கு முக்கியமானது).
8வது சதம்
டெய்லருக்கு இது 8வது ஒரு நாள் சதமாகும். ஜிம்பாப்வே வீரர்களிலேயே அதிக அளவில் ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்தவரும் டெய்லர்தான். அந்த வகையில் இது புதிய சாதனையாகும்.
கடைசிப் போட்டியில் கலக்கல்
டெய்லருக்கு இது கடைசிப் போட்டி என்பதும், அது உலகக் கோப்பைப் போட்டியாக அமைந்ததும், அதில் அவர் சதம் அடித்ததும் கூடுதல் சிறப்பாக அமைந்து போனது.
தம்பி, ஜடேஜா.. பாவம்ய்யா நீ!
ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.. டெய்லரின் அதிரடிக்கு இது ஒரு சின்ன உதாரணம்... ஜடேஜாவின் ஒரு ஓவரில் அவர் 25 ரன்களைக் குவித்தார். அதில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் அடக்கம்.
அதே கரட்டாண்டி!
அதே ஜடேஜாவின் இன்னொரு ஓவரில் அவர் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார்.
சேம் பிளட்!
இதேபோல அஸ்வினையும் அவர் விடவில்லை. வெளுத்து விட்டார்.
பேக் டூ பேக்... பர்ஸ்ட்!
அயர்லாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியிலும் டெய்லர் 121 ரன்களை விளாசியிருந்தார். இன்றும் ஒரு சதம். இப்படி உலகக் கோப்பப் போட்டியில் அடுத்தடுத்து சதம் போட்ட ஒரு ஜிம்பாப்வே வீரர் டெய்லர்தான்.
இந்தியாவுக்கு எதிராக முதல் சதம்
அது மட்டுமல்ல, உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதம் போட்ட முதல் ஜிம்பாப்வே வீரரும் டெய்லர்தான். இதுவும் ஒரு புதிய சாதனை.
அதிக ரன் குவித்தும் சாதனை
டெய்லர் இந்த உலகக் கோப்பையில் 375 ரன்களைத் தாண்டியுள்ளார். இதுவும் ஒரு சாதனையாகும். அதாவது 1999 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேயின் நீல் ஜான்சன் 367 ரன்களைக் குவித்ததே ஜிம்பாப்வேக்கு சாதனையாக இருந்தது. அதையும் டெய்லர் முறியடித்து விட்டார்.
அட போங்கப்பா, இவரைப் பத்தி பேசினா இன்னிக்குப் பூரா பேசிட்டே இருக்கலாம்...இத்தோட முடிச்சுக்குவோம்!