லிங்கன், நியூசிலாந்து: பயிற்சி ஆட்டம் என்றால் இதுதான். வலிமை வாய்ந்த இலங்கை அணியை அனைத்து வகையிலும் சோதித்து, அருமையான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளது ஜிம்பாப்வே அணி.
முதலில் பந்து வீச்சிலும், பின்னர் பேட்டிங்கிலும் ஜிம்பாப்வே வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பந்து வீச்சை விட பேட்டிங்கில் அவர் கலக்கி விட்டனர். இலங்கையின் வயிறையும் கலங்கச் செய்து விட்டனர்.
நியூசிலாந்தின் லிங்கன் மைதானத்தில் நடந்த இந்த உலகக் கோப்பை வார்ம் அப் போட்டியில் முதலில் இலங்கை பேட் செய்தது.
50 ஓவர்கள் வரை நின்ற இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்களை எடுத்தது. திமுத் கருணரத்னே 58 ரன்கள் எடுத்தார். ஜீவன் மெண்டிஸ் தன் பங்குக்கு 51 ரன்களைச் சேர்த்தார். லஹிரு திரிமன்னே 30 ரன்களையும், மஹளா ஜெயவர்த்தனே 30 ரன்களையும் சேரத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார். பிராஸ்பர் உத்சயா, சாலமோன் மைர், தின்ஷே பன்யங்கரா, தவான்டா முப்பரிவா ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
பின்னர் 280 ரன்கள் என்ற இலக்கை நோக்கி நடைபோடத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியைக் கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை வீரர்கள் திணறிப் போய் விட்டனர். குறிப்பாக யார்க்கர்களை வீசுவதில் மன்னரான லசித் மலிங்காவை போட்டுத் தாளித்து விட்டனர் ஜிம்பாப்வே வீரர்கள். 7 ஓவர்கள் வீசிய மலிங்கா 46 ரன்களை அள்ளிக் கொடுத்ததோடு, விக்கெட் எதையும் வீழ்த்தத் தவறினார். இது இலங்கையை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி விட்டது.
ஹாமில்டன் மஸ்கட்ஸா அபாரமாக ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 117 ரன்களைக் குவித்தார். பிரன்டன் டெய்லர் 63 ரன்களைச் சேர்க்க, சீன் வில்லியம்ஸ் பேட்டிங்கிலும் பிரமாதமாக ஆடி 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், 45.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி ரன்களை எடுத்து இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஜிம்பாப்வே.
பிப்ரவரி 15ம் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரி்ககாவைச் சந்திக்கிறது ஜிம்பாப்வே. வலிமை வாய்ந்த அணியான தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கவுள்ள நிலையில் இன்னொரு வலுவான அணியை வீழ்த்தியிருப்பது ஜிம்பாப்வேக்கு நிச்சயம் தெம்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இலங்கை அணி தனது முதல் போட்டியில் பிப்ரவரி 14ம் தேதி நியூசிலாந்துடன் மோதவுள்ளது.