சவுதி அரேபியா கொடுத்த அதிர்ச்சி.. ஓய்வறையில் நிலவிய அமைதி.. கேப்டனாக மெஸ்ஸி பேசிய வார்த்தைகள்!
தோஹா: சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வி குறித்து அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சவுதி அரேபியா அணியிடம் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்து மெஸ்ஸி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 35 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்த அர்ஜென்டினா அணி, ஃபிஃபா உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே தோல்வியடைந்ததால் ஏராளமான ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் சவுதி அரேபியா அணி அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மெஸ்ஸி மனநிலை
அதேபோல் சவுதி அரேபியா அணியுடனான தோல்விக்கு பின் மெஸ்ஸி என்ன செய்தார், அணி வீரர்கள் என்ன பேசினர், விரக்தியை வெளிப்படுத்தினாரா, கண்ணீர் விட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் சவுதி அரேபியா அணியுடனான தோல்விக்கு பின் மெஸ்ஸியின் மனநிலை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

ஓய்வறையில் அமைதி
சவுதி அரேபியா அணிக்கு எதிரான ஆட்டம் முடிவுக்கு வந்த பின்னர், லாக்கர் அறையில் எந்த வீரரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும், அனைவருமே அமைதி காத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தோல்விக்கு குறித்து லயோனல் மெஸ்ஸி கூறுகையில், உண்மை என்னவென்றால், இறந்ததை போல் உணர்கிறோம். இது மிகவும் கடினமாக உள்ளது.

மெஸ்ஸி கருத்து
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும், 3 புள்ளிகளை பெற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது. ஆனால் எங்களின் 3 புள்ளிகளை இன்னொரு அணிக்கு கொடுப்போம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் காரணத்தோடு மட்டுமே அனைத்து காரியங்களும் நடக்கும். அடுத்து வரும் போட்டிகளுக்கு எங்களை தயார்படுத்த இந்த தோல்வி உதவும். எதிர்வரும் ஒவ்வொரு போட்டிகளையும் வெல்ல வேண்டும். அது எங்களின் கைகளில் மட்டுமே உள்ளது என்று தெரிவித்தார்.

அடுத்த போட்டிகள்
இதனைத் தொடர்ந்து வரும் 27ம் தேதி அர்ஜென்டினா அணி மெக்சிகோ அணியையும், டிச.1ம் தேதி போலாந்து அணியையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த இரு அணிகளியும் வீழ்த்தினால் மட்டுமே அர்ஜென்டினா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும். இந்த இரு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்தாலும், உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications