டெல்லி : இந்தியாவின் தலைசிறந்த ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் 113வது பிறந்தநாளான இன்று, இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தன் காலத்தில் உலகளவில் ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்தினார் தியான் சந்த். இந்தியாவுக்கு மூன்று முறை தொடர்ந்து ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்றுக் கொடுத்தவர்.
ஹாக்கியில் தற்போது வேண்டுமானால் இந்தியா சிறிது தடுமாறுகிறது என கூறலாம். ஆனால், தியான் சந்த் காலத்தில் இந்தியா தான் ஹாக்கியில் முதன்மையான நாடு. அவரைப் பற்றிய சில சுவாரஸ்யங்களைப் பார்க்கலாம்.
தியான் சந்த் தன் பதினாறாவது வயதில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக சேர்ந்தார். அதே காலகட்டத்தில் ஹாக்கியிலும் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பித்தார்.
இரவு, பகல் என பாராமல் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு தன் ஹாக்கி திறமையை வளர்த்துக் கொண்டார் தியான் சந்த். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஹாட்ரிக் தங்கம் வென்று கொடுத்த பெருமை இவரையே சாரும். 1928, 1932, 1936 என மூன்று ஒலிம்பிக் தொடர்களில் ஹாக்கியில் தங்கம் வென்றது இந்தியா.
1936-இல் ஜெர்மனியின் பெர்லின் நகரில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அதில் ஹாக்கி இறுதியில் இந்தியா, ஜெர்மனியை 8-1 என வீழ்த்தியது. அந்த போட்டியில் மூன்று கோல்கள் அடித்தார் தியான் சந்த். இவரது திறமையைக் கண்ட ஹிட்லர், ஜெர்மனி நாடு குடியுரிமை அளிக்க முன்வந்தார். தன் ராணுவத்தில் அவருக்கு கலோனல் பதவி தரவும் முடிவு செய்தார். எனினும், தியான் சந்த் அதை மறுத்துவிட்டார்.
ஒருமுறை நெதர்லாந்து நாட்டில், தியான் சந்த்தின் ஹாக்கி மட்டை உடைக்கப்பட்டு, உள்ளே காந்தம் ஏதேனும் வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர். இது தியான் சந்த்தின் திறமையை அவமானப்படுத்தும் செயல் என்றாலும், இதன் மூலம் அவரது பெருமை மேலும் உயர்ந்தது/
இந்தியாவின் தவிர்க்க முடியாத விளையாட்டு வீரரான தியான் சந்த்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது.