ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை வில்வித்தை போட்டியில் காலியிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் பொம்பைலா தேவி. இவர் இரண்டாவது சுற்றில் தைவான் வீராங்கனை லின் ஷின் சியாவை தோற்கடித்தார்.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின. அன்றைய தினம் நடந்த ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் தீபிகா குமாரி, பொம்பைலா தேவி, லட்சுமி ராணி ஆகியோர் பங்கேற்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு நடந்த வில்வித்தை ரேங்க்கிங் சுற்றில் தீபிகா குமாரி 640 புள்ளிகளுடன் 20-வது இடத்தைப் பிடித்தார். பொம்பைலா தேவி 24-வது இடத்தையும், லட்சுமிராணி 43-வது இடத்தையும் பெற்றனர். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு ( ரவுண்ட் 32 ) மூவரும் முன்னேறினர்.
இந்நிலையில், இந்திய வீராங்கனை பொம்பைலா தேவி பங்கேற்ற வில்வித்தை தகுதிச் சுற்று போட்டி நடந்தது. இதில் ஆஸ்திரிய வீராங்கனை பால்டெப்பை 6 - 2 என்ற கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் பொம்பைலா தேவி.
இதையடுத்து நடந்த இரண்டாவது சுற்றில் தைவான் வீராங்கனை லின் ஷின் சியாவை தோற்கடித்தார் பொம்பைலா தேவி. இதன் மூலம் காலியிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.