கபடி கூட்டமைப்பு என்ன உங்க குடும்ப நிறுவனமா.. டெல்லி ஹைகோர்ட் சுளீர்
டெல்லி : இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு (AKFI) உடைய “வாழ்நாள் தலைவர்” என்ற பதவியில் இருக்கும் ஜனார்தன் சிங் கேஹ்லாட் மற்றும் அதன் தலைவர் பதவியில் இருக்கும் அவரின் மனைவியையும், பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது, டெல்லி உயர்நீதிமன்றம்.
அவர்கள் இருவரும், கபடி கூட்டமைப்பை குடும்ப நிறுவனம் போல் நடத்தி, பணத்தை வாரி இரைத்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளது உயர்நீதிமன்றம். மேலும், தற்காலிமாக கபடி கூட்டமைப்பை நிர்வகிக்க ஒய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சனத் கவுல்-ஐ நியமித்துள்ளது.
ஜனார்த்தன் சிங் 28 ஆண்டுகள் கபடி கூட்டமைப்பின் தலைவராக இருந்துவிட்டு, தான் பதவி விலகிய பின், அதை தன் மனைவிக்கு வழங்கும் வகையில் செயல்பட்டுள்ளார். மேலும், கபடி கூட்டமைப்பின் “வாழ்நாள் தலைவர்” என ஒரு பதவியை உருவாக்கி அதை தன் வசம் வைத்துகொண்டுள்ளார். இவர் தற்போது சர்வதேச கபடி கூட்டமைப்புக்கு தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கபடி வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான மகிபால் சிங் மற்றும் சிலர் ஜனார்த்தன் சிங் கேஹ்லாட் மற்றும் அவரின் மனைவியின் பதவிகளை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தான் இந்த அதிரடி அறிவிப்பை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

வெளிப்படையான அராஜகம்
நீதிமன்றம், இந்த பதவிகளை அவர்கள் அடைந்தது மற்றும் அதை தங்கள் சுயலாபத்துக்கு பயன்படுத்தியதை பற்றி கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இருவரும், நிர்வாகத்தில் வெளிப்படையான அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய விஷயங்களை, குற்றம் என தெரிந்தும் தவிர்த்துள்ளனர் என கூறியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

கபடி அமைப்பா? இல்லை குடும்ப நிறுவனமா?
மேலும், கபடி விளையாட்டை வழிநடத்தி செல்ல நாட்டில் ஆளே இல்லை என்பது போல, அதை தங்கள் குடும்ப நிறுவனம் போல பயன்படுத்தி இருக்கிறார்கள். தேசிய விளையாட்டு வளர்ச்சி சட்டத் தொகுப்பில் இல்லாத ஒரு பதவியான "வாழ்நாள் தலைவர்" என்ற பதவியை கபடி கூட்டமைப்பில் ஏற்படுத்த, அதன் விதிகளில் சட்டத்திற்கு புறம்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சாடியுள்ளது நீதிமன்றம்.

இரகசியமாகவும், மறைமுகமாகவும்
அடுத்து, முன்னாள் தலைவரின் மனைவியை தலைவர் பதிவுக்கு நிறுத்த இரகசியமாகவும், மறைமுகமாகவும் செயல்பட்ட விதம் குறித்து தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளது நீதிமன்றம். அவர் தனது கபடி கூட்டமைப்பில் பெற்ற பொருளாதார ரீதியிலான பலன்களை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

ஆறு மாதத்தில் தேர்தல்
இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தி அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, தற்போது நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக நிர்வாகி கபடி கூட்டமைப்பை வழிநடத்துவார் என கூறியுள்ளது, டெல்லி உயர்நீதிமன்றம்.


Click it and Unblock the Notifications