டெல்லி: 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் இன்றோடு முடிகின்றன. அடுத்தச் சுற்றில் விளையாடும், 16 அணிகள் எவை என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டன.
நேற்று இரவு நடந்த ஆட்டங்களில், சி பிரிவில் ஈரான் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவை வென்றது. ஜெர்மனி 3-1 என குய்னாவை வென்றது. டி பிரிவில் ஸ்பெயின் 2-0 என வடகொரியாவை வென்றது. பிரேசில் 2-0 என நைஜர் அணியை வென்றது.
இன்று நடக்கும் ஆட்டங்களில் இ பிரிவில் பிரான்ஸ் - ஹோண்டுராஸ், ஜப்பான் - நியூ காலடோனியா அணிகளும், எப். பிரிவில் இங்கிலாந்து - ஈராக், மெக்சிகோ - சிலி அணிகளும் மோதுகின்றன.
இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 24 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள், 16ம் தேதி துவங்குகிறது. நாக்-அவுட் முறையில் நடக்க உள்ள அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்:
ஏ பிரிவு - அமெரிக்கா, கொலம்பியா, கானா.
பி பிரிவு - பராகுவே, மாலி.
சி பிரிவு - ஈரான், ஜெர்மனி
டி பிரிவு - நைஜர், பிரேசில், ஸ்பெயின்
இ பிரிவு - ஹோண்டுராஸ், ஜப்பான், பிரான்ஸ்
எப் பிரிவு - ஈராக், மெக்சிகோ, இங்கிலாந்து