டெல்லி: இந்தியாவில் இருந்து சர்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக சுவீடன் நாட்டுக்கு சென்ற 92 இந்திய வீரர்களை ஏஜெண்டுகள் நடுத்தெருவில் தவிக்க விட்ட சம்பவம் நடந்தேறியிருக்கிறது.
மும்பையைச் சேர்ந்த அக்பர் டிராவல்ஸ் என்ற நிறுவனம் மூலம் 92 இந்திய வீரர்கள் சுவீடனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு உமேஷ் பேடி என்ற நபர் மூலமாக இந்திய வீரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் திடீரென உரிய நேரத்துக்கு முன்பாக வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். வேறுவழியின்றி நடுத்தெருவில் உணவு ஏதுமின்றி 92 பேரும் தங்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக சத்தியநாராயணா என்ற வீரர் கூறியுள்ளதாவது:
இந்தியாவில் இருந்து செல்லும்போது அனைத்துவிதமான செலவுகளையும் பார்த்துக் கொள்ளவதாக உறுதியளித்திருந்தனர். ஆனால் நாங்கள் போட்டிகளில் பங்கேற்ற பிறகு கூடுதல் தொகை கேட்டனர். இதனால் ஆயிரம் யூரோ வரை சேகரித்துக் கொடுத்தோம். ஆனாலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஹோட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டு வீதியில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அங்கு எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உமேஷ் பட் என்பவர்தான் எல்லா குளறுபடிகளுக்கும் காரணம். ஒருநாள் முழுவதும் உணவு இல்லாமல் தவித்தோம் என்றார் அவர்.