தொடக்கம் முதலே இந்தியாவின் ஆதிக்கம்
நேற்றைய போட்டியில் தொடக்கம் முதலே இந்தியாவின் ஆதிக்கம் அமோகமாக இருந்தது. முதலில் பவுலிங்கிலும், பின்னர் பேட்டிங்கிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருந்தது.
தவான் - கோஹ்லி பொறுப்பாட்டம்
இலங்கை பந்து வீச்சாளர்களை திறம்பட சமாளித்து இந்தியாவின் ஷிகர் தவான், விராத் கோஹ்லி ஆகியோர் அழகான அரைசதம் போட்டு இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்தனர்.
இலங்கை எடுத்த 181
முன்னதாக விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் வரை விளையாடி 181 ரன்களை மட்டுமே எடுத்தது.
இந்தியாவின் சூப்பர் சேஸிங்
பின்னர் ஆடிய இந்தியா, தவன் மற்றும் விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றிக் கனியைப் பறித்தது.
சிறப்பான தொடக்கம்
தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மாவும், தவனும் சேர்ந்து பிரமாதமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
ரோஹித்தின் 33
ரோஹித் சர்மா நிதானமாக ஆடி 33 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
வெற்றி வரை கொண்டு வந்து விட்ட தவன்
இருப்பினும் தவனும், விராத் கோஹ்லியும் இணைந்து பொறுப்பாக ஆடி ஆளுக்கு ஒரு அரை சதம் போட்டனர். தவன், வெற்றியின் அருகே வரும் வரை ஆடி பின்னர் அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 68.
கடைசி வரை களத்தில் இருந்த கோஹ்லி
மறு முனையில் கோஹ்லி கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் ஆட்டமிழக்காமல் 58 ரன்களைக் குவித்தார்.
எல்லாமே வெற்றி
இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை ஒரு தோல்வியைக் கூட சந்திக்கவில்லை. இரு பயிற்சி ஆட்டங்களிலும் அபார வெற்றி பெற்றது. அதேபோல முக்கியப் போட்டிகள் மூன்றிலும் வென்றது. நேற்று அரை இறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்குள்ளும் நுழைந்து விட்டது.
3வது முறையாக இறுதிப் போட்டி
இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைவது இது 3வது முறையாகும். 2000மாவது ஆண்டு போட்டியில் 2வது இடத்தைப் பிடித்தது. 2002 போட்டியி்ல் மழை காரணமாக போட்டி நடைபெறாமல், இந்தியாவும், இலங்கையும் கூட்டு வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
23ம் தேதி இங்கிலாந்துடன் மோதல்
23ம் தேதி இங்கிலாந்துடன் இறுதிப் போட்டியில் மோதுகிறது இந்தியா. இப்போட்டி எட்பாஸ்டனில் நடைபெறும்.