விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் விருதுதான் கேல் ரத்னா.
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு பில்லியர்ட்ஸ் விளையாட்டின் முன்னாள் உலக சாம்பியன் மைக்கேல் பெர்ரீரா தலைமையிலான கமிட்டி, துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதியை தேர்வு செய்து விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.
ஆனால் இந்த விருதுக்கு முதலில் இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ண பூனியா, பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான கிரிஷா ஆகியோரின் பெயர்கள் தான் பரிசீலிக்கப்பட்டன. இதில் பூனியாவுக்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால் தேர்வு கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான அஞ்சலி பகவத் வரவில்லை.
அவர் கூட்டத்திற்கு வந்ததும், துப்பாக்கி சுடுதல் வீரர் ரஞ்சன் சோதியின் பெயர் சேர்க்கப்பட்டது. இதனால் கிரிஷா நீக்கப்பட்டு, பூனியா-சோதி இடையே போட்டி ஏற்பட்டது. இதன் முடிவில் கேல் ரத்னா விருதுக்கு ரஞ்சன் சோதி தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் கமிட்டி உறுப்பினர்கள் பூனியாவுக்கு ஆதரவாக இருந்தனர்.
இதனால் அதிருப்தி அடைந்த கிருஷ்ண பூனியா மத்திய விளையாட்டு அமைச்சகத்திடம் புகார் செய்தார். அப்போது, 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் இந்தியாவுக்காக முதலில் தங்கப்பதக்கம் வென்றது நான் தான். இந்த விருதுக்கு நான் தகுதியானவள். எனவே விருதை இருவருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும் என்றார்.
மேலும் மல்யுத்த வீரர்கள் சுஷில்குமார், யோகேஷ்வர் தத், கிரிக்கெட் வீரர் ஷேவாக் ஆகியோரும் கிருஷ்ண பூனியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
ஆனால் கடைசியாக மத்திய அரசு அறிவித்த கேல் ரத்னா விருது பட்டியலில் ரஞ்சன் சோதி பெயர்தான் இடம்பெற்றிருந்தது. இதனால் கிருஷ்ண பூனியா அதிருப்தி அடைந்துள்ளார்.