டெல்லி: விளையாட்டு துறைக்கான நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பெயரை, விளையாட்டு அமைச்சகம் இன்று பரிந்துரை செய்துள்ளது.
2014ம் ஆண்டு, ஆசிய விளையாட்டு போட்டியில் பிரார்த்தனா தாம்பேருடன் இணைந்து பெண்கள் இரட்டையர் டென்னிசில் வெண்கல பதக்கமும், கலப்பு இரட்டையரில் தங்கமும் வென்றார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. அதேபோல ப்ருனோ சோரசுடன் இணைந்து அமெரிக்க ஓபன் டென்னிசில் கலப்பு இரட்டையர் பட்டத்தையும் வென்றார்.
அவரது திறமையை பாராட்டி ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய விளையாட்டு துறை அமைச்சகம், விருது கமிட்டிக்கு சானியா பெயரை பரிந்துரைத்துள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த விம்பிள்டன் டென்னிசில் மகளிர் இரட்டையர் பட்டத்தை சானியா வென்ற போதிலும், ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விம்பிள்டன் வெற்றி கணக்கில் எடுக்கப்படவில்லை. முன்னாதக, 2004ல் அர்ஜுனா விருதையும், 2006ல் பத்ம ஸ்ரீ விருதையும் சானியா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.