படுகோனேவுக்கு வாழ்நாள் சாதனை விருது!
கொச்சி: தலைப்பை பார்த்ததும், இவங்க நடிக்க வந்து கொஞ்ச நாள்தானே ஆச்சு. அதுக்குள்ளவே வாழ்நாள் சாதனை விருது வழங்கப் போகிறார்களா என்றால், நீங்கள், 25 வயதுக்கு கீழ்பட்டவராகவே இருப்பீர்கள். அல்லது விளையாட்டு துறையில் உங்களுக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை என்று அர்த்தமாக இருக்கும்.
கோபிசந்த், சாய்னா நெய்வால், பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் கிடாம்பி போன்றவர்களுக்கு எல்லாம் முன்னாடி, பாட்மின்டன் விளையாட்டில் இந்தியாவை தனியாக தாங்கி பிடித்தவர்தான் பிரகாஷ் படுகோனே.

படுகோனே என்றதும், தற்போதுள்ளவர்களுக்கு தெரிந்தது, நடிகை தீபிகா படுகோனேதான். அந்த அழகு தேவையை நமக்கு தந்தவர் பிரகாஷ்.
தீபிகாவின் தந்தையான பிரகாஷ் படுகோனே, தொடர்ந்து, 8 முறை தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றவர். பாட்மின்டன் போட்டிகளில் மிகவும் முக்கியமான ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை, 1980ல் வென்றார். 1983 உலக சாம்பியன் போட்டியில் வெண்கலம், 1978 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்.
அவருடைய சாதனைகளுக்காக,1972ல் அர்ஜூனா விருது, 1982ல் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.
பாட்மின்டன் விளையாட்டுக்கு அவர் ஆற்றிய சிறந்த சேவைகளை கவுரவிக்கும் வகையில், இந்திய பாட்மின்டன் சங்கம் உருவாக்கியுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் முதல் வீரராகிறார் பிரகாஷ். விரைவில் டில்லியில் நடக்க உள்ள விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
Story first published: Tuesday, September 12, 2017, 10:28 [IST]
Other articles published on Sep 12, 2017


Click it and Unblock the Notifications