மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 தொடரையும், 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்தியா வெற்றி பெற்ற நிலையில், மெல்போர்னில் இன்று 2வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியிலும் வெற்றி பெற்றால், டி20 தொடரை கைப்பற்ற முடியும் என்ற முனைப்பில் இந்தியா களமிறங்கியது.
டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து பேட் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், விராட் கோஹ்லி, 33 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து நாட்-அவுட்டாக களத்தில் நின்றார்.
ஷிகர் தவான் 42 ரன், டோணி 14 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரில் டோணி அவுட்டான பிறகு களமிறங்கிய சுரேஷ் ரெய்னா பந்து எதையும் எதிர்கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் 200 ரன்களை தாண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இந்திய அணியால் 184 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.
இதையடுத்து, 185 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆஸ்திரேலிய அணி ஆடத்தொடங்கியது. ஸ்மித் இல்லாத நிலையில் கேப்டனாக பொறுப்பு வகித்த ஆரோன் பின்ச்சும், ஷான் மார்ஷும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவருமே இந்திய வேகப்பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 9.5 ஓவர்களில் ஆஸ்திரேலியா 94 ரன்கள் குவித்த நிலையில், 23 ரன்கள் எடுத்திருந்த ஷான் மார்ஷ், அஸ்வின் பந்தில் ஹர்திக் பண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதன்பிறகு ஆஸ்திரேலியாவை எழ விடாமல் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அமுக்கிவிட்டனர். கிறிஸ் லைன் 2 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், ஷேன் வாட்சன், 15 ரன்களிலும் நடையை கட்ட ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் ஆட்டம் கண்டது.
ஒருமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஆரோன் பின்ச் எதிர்பாராத விதமாக 74 ரன்களில் ரன் அவுட் ஆக, மொத்தமாக இந்தியா பக்கம் சாய்ந்தது ஆட்டம். கடைசி கட்டத்தில் துள்ளிய ஃபால்க்னர் ஜடேஜா பந்தில் டோணியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு 10 ரன்களில் வெளியேற்றப்பட்டபோது, இந்திய வெற்றி உறுதியானது. டோணியின் கால் காப்பில் பந்து பட்டு ஸ்டம்பில்பட்டதால் அது அதிருஷ்டவசமான ஸ்டம்பிங்கானது.
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணியால் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது எனவே இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக, ஆட்ட நாயகன் விருதை, விராட் கோஹ்லி தட்டிச்சென்றார்.