
ஐசிசி அறிவிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பார்வையாளர்கள் வெகுவாக குறைந்துள்ள நிலையில் பாரம்பரியமாக விளையாடப்படும் 5 நாள் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்கும் திட்டத்தை ஐசிசி அறிவித்துள்ளது.

கோலி, ரவிசாஸ்திரி கண்டனம்
ஐசிசியின் இந்த முடிவிற்கு கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், தென்னாப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளசிஸ் உள்ளிட்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

"டெஸ்ட் போட்டி அழிந்துவிடும்"
ஐசிசியின் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்த கேப்டன் விராட் கோலி, ஐந்து நாள் போட்டி, 4 நாட்களாக மாற்றப்பட்டால், அடுத்தது 3 நாள் என குறைக்கப்பட்டு இறுதியில் டெஸ்ட் போட்டிகளே இல்லாத நிலை உருவாகும் என்று தெரிவித்திருந்தார்.

முட்டாள்தனமானது என கருத்து
டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக மாற்றும் ஐசிசியின் இந்த திட்டம் முட்டாள்தனமானது என்று இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறிப்பிட்டிருந்தார்.

கோலி, சாஸ்திரிக்கு பிசிசிஐ ஆதரவு
இந்நிலையில், ஐசிசியின் இந்த திட்டத்திற்கு சிவப்பு கொடி காட்ட பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக அதன் நிர்வாகி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிசிசிஐ திட்டம்
இந்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலீஷ் மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு உள்ளிட்டவற்றுடன் வரும் 12ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள பிசிசிஐ அவார்ட் நிகழ்ச்சியின் இடையில் ஆலோசனை மேற்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நிர்வாகி குறிப்பிட்டுள்ளார்.

பிசிசிஐ அறிவிப்பு
இரண்டு மிகப்பெரிய அணிகள் மோதும்போது இந்த திட்டம் பொருந்தாது என்றும் சிறிய அணிகளுக்கு வேண்டுமானால் இதை செயல்படுத்தி பார்க்கலாம் என்றும் அவர் கூறினார். பாரம்பரிய வடிவத்துடன் விளையாடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications