டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை ஏழு ஐபிஎல் அணிகளுக்கு விளையாடி, அதிக ஐபிஎல் அணிகளுக்கு விளையாடியுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகின்றது. இதில் இந்திய வீரர்களுடன், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விளையாடி வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில் இந்த ஆண்டு 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கியுள்ளார், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச். இது அவர் பங்கேற்கும் ஏழாவது அணியாகும்.
2010ல் முதல் முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் களமிறங்கினார். 2011ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. அடுத்த ஆண்டும் டெல்லிக்காகவே விளையாடினார். 2013ல் புனே வாரியர்ஸ் அணிக்கு மாறிய அவர், 2014ல் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார்.
2015ல் மும்பை இந்தியன்ஸ் அவரை ஏலம் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. 2016ல் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார்.
இந்த சீசனில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக அவர் விளையாடுகிறார். திருமணம் காரணமாக டெல்லிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. அடுத்ததாக நடந்த இரண்டு போட்டிகளிலும் முதல் பந்திலயே டக் அவுட்டாகி வெளியேறினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ்
ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கினர். அதையடுத்து ஆஸ்திரேலிய கேப்டனாகும் வாய்ப்பு பிஞ்ச்சுக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவரைத் தவிர நான்கு வீரர்கள், ஆறு ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளனர். விக்கெட் கீப்பரான பார்த்திவ் படேல், சிஎஸ்கே, டெக்கான் சார்ஜர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, மும்பை இந்தியன்ஸ், ராயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார். தற்போது பெங்களூரு அணிக்கு திரும்பியுள்ளார். இலங்கையின் ஆல்ரவுண்டரான திசாரா பெரிரா, சிஎஸ்கே, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார். இர்பான் பதான் ஆறு அணிகளுக்கும், யுவராஜ் சிங், ஆர்பி சிங், அசோக் திண்டா ஆகியோர் ஐந்து அணிகளுக்காகவும் விளையாடி உள்ளனர்.
அதே நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மட்டும்தான், இதுவரை ஒரே அணிக்காக விளையாடி வருகிறார்.