இதுதான் உண்மையான ஷாசாத்
நேற்றைய போட்டியில் ஆப்கன் துவக்க வீரர் முஹம்மத் ஷாசாத் சதம் அடித்து பட்டையைக் கிளப்பினார். ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன் கூறுகையில், "இன்றைய போட்டியில் ஆடுகளம் சுழலுக்கு ஒத்துழைத்தது. குறிப்பாக ஷாசாத்-க்கு மிகவும் ஏற்றது போல இருந்தது. இன்று நாம் பார்த்ததுதான் உண்மையான ஷாசாத். துரதிர்ஷ்டவசமாக இது கடைசி போட்டியில் தான் நிகழ்ந்துள்ளது" என ஷாசாத்தின் அபார ஆட்டம் குறித்து பேசினார்.
டை என்பதே வெற்றி தான்
"இந்தியா போன்ற அணிகளோடு டை செய்வதே வெற்றி பெறுவது போல தான். அவர்கள் எப்பொழுதும் எளிதாக சேஸ் செய்து விடுவார்கள்" என இந்தியா குறித்து பெருந்தன்மையாக பேசினார் ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கார் ஆப்கன். நேற்றைய போட்டியில் இந்தியா போராடி டை மட்டுமே செய்தது. நல்ல துவக்கம் கிடைத்தும் இந்தியா மிடில் ஆர்டரில் விக்கெட்களை வேகமாக இழந்தது.
வெயில்ல கஷ்டப்பட்டு ஆடினோம்
நேற்று சதம் விளாசிய ஷாசாத் கூறுகையில், "இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. மிகவும் வெப்பமான சூழல். இங்கே ஆறு மணி நேரம் ஆடிவிட்டு இப்படி ஆனது, அவ்வளவு சரியான முடிவில்லை. ஆசிய கண்டத்தின் முக்கியமான அணிகளோடு கிரிக்கெட் ஆடியதில் பெருமை தான். இன்று நான் அனைத்து பந்துகளையும் அடிக்க முடிவு செய்தேன். காரணம், நாங்கள் நாளை கிளம்புகிறோம். இன்று தான் கடைசி என்பதால் இன்று பந்துகளை அடித்தேன்" என கூறினார் ஷாசாத். இவருடைய பேச்சிலேயே இவர் வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர் என்பது தெரிகிறது. இவரது ஆட்டமும் நேற்று அப்படி தான் இருந்தது. தன் பருமனான உடலோடு இவர் சலிக்காமல் விக்கெட் கீப்பிங் செய்வதும், சிக்ஸர்கள் அடித்து மிரட்டுவதும் காண்போரை வியக்க வைத்தது.
தோனி என்ன சொன்னார்?
முக்கிய வீரர்கள் இல்லாத அணியை வழிநடத்திய தோனிக்கு இது கேப்டனாக 200வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. "நான் எதுவும் தவறாக நடந்தது என கூற மாட்டேன். நாங்கள் அனைவருக்கும் ஒரு போட்டி கொடுக்க நினைத்தோம். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு தான் பெருமை போய் சேர வேண்டும். அவர்கள் தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்து வந்தார்கள். இந்த ஆடுகளத்தில் 250 என்பது நல்ல ஸ்கோர். நாங்கள் தோற்று இருக்க வேண்டும். எனினும், டை என்பது நல்லதே" என கூறினார் தோனி.