டெல்லி: அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையுடன் வலம் வரும் அனில் கும்ப்ளேவும், இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டீல் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது அனில் கும்ப்ளேவும் இணைந்துள்ளார்.
அனில் கும்ப்ளே முன்னாள் கேப்டன். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை வைத்திருப்பவர்.
இவரையும் சேர்த்து இதுவரை மொத்தம் 57 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. இருப்பினும் அனைவரின் பெயர்களையும் அது வெளியிடவில்லை.
கும்ப்ளே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மென்டாராக இருக்கிறார். அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியிலும் பணியாற்றியுள்ளார். அனில் கும்ப்ளே மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர். சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர். சக வீரர்களுடன் இணக்கமாக பழகக் கூடியவர். இனிய குணங்கள் நிரம்பியவர்.
132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்களையும், 271 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார் கும்ப்ளே. டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெளிநாட்டு சதத்துடன் 2506 ரன்களையும் எடுத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக ஒரு வருடம் பதவி வகித்துள்ளார்.