
ஐதராபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் போல, இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐபிஎல்லில் தன்னுடைய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று இரவு சந்திக்க உள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி 11வது சீசன் துவங்கியுள்ளது. முதல் நாளில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில், கடைசி ஓவர்களில் பிராவோவின் அதிரடி ஆட்டத்தில் சிஎஸ்கே வென்றது.

இரண்டாண்டுகள் தடையில் இருந்து திரும்பியுள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிஎஸ்கே தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே நிறைவேற்றியுள்ளது. இந்த சீசனின் 4வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசரஸ் அணியை சந்திக்க உள்ளது. சிஎஸ்கே போல, ராஜஸ்தான் அணியும், இரண்டாண்டுகளுக்கு பிறகு திரும்பியுள்ளதால், இன்றைய போட்டி அந்த அணிக்கு முக்கியமாகும்.
2016ல் சாம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ், கடந்தாண்டு எலிமினேட்டர் சுற்றில் வெளியேறியது. அதனால் இந்த முறை வெற்றியுடன் துவக்குவதற்கு அந்த அணியும் தயாராகி வருகிறது.
இரண்டு அணிகளுமே கேப்டன்கள் பிரச்னையில் சிக்கின. சமீபத்தில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டியின்போது, பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. அதையடுத்து, டேவிட் வார்னர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித், பந்து சேதப்படுத்திய விவகாரத்தால் மாற்றப்பட்டார். அதையடுத்து அஜிங்யா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று நடந்த டெல்லி - பஞ்சாப் அணிகள் மற்றும் கொல்கத்தா -பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி, பஞ்சாப் கேப்டன் அஸ்வின், கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் கேப்டன்சி திறமையை சோதிக்கும் ஆட்டங்களாக அமைந்தது.
இன்றைய போட்டி, புது கேப்டன்களான கேன் வில்லியம்சன், ரஹானேவுக்கு வைக்கப்பட்டுள்ள சோதனையாகும். இதில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதே, இன்றைய போட்டியின் எதிர்பார்ப்பாகும்.