விழிப்புணர்வு
கொரோனா வைரஸ் உலகில் காலடி எடுத்து வைத்தது முதல் அது தொடர்பாக ட்விட்டரில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்திகளை வெளியிட்டு வருகிறார் அஸ்வின். துவக்கத்தில் சென்னை மக்கள் கொரோனா வைரஸ் பரவும் நேரத்திலும் சோசியல் டிஸ்டன்சிங் குறித்து அறிந்து கொள்ளவில்லை என புகார் கூறி இருந்தார். தொடர்ந்து கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகம் எடுத்தால், நாடு நாசமாகி விடும் என எச்சரித்து இருந்தார்.
வாட்ஸ்ஆப் வீடியோ
இந்த நிலையில் ஒரு வீடியோ ஒன்றை எடுத்து அதை சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பரப்பி உள்ளார் அஸ்வின். அந்த வீடியோவில் பல அதிரடி எச்சரிக்கைகளை அவர் கூறி உள்ளார். மக்கள் வீட்டிலேயே இருக்காவிட்டால் நாடு பின்தங்கி விடும் என கூறி இருக்கிறார்.
ஜாலியாக இருந்த மக்கள்
அதில் அவர் கூறியது இது தான் - இரண்டு, மூன்று நாட்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி மக்கள் ஊரடங்கு என்றார். அதன் பின் ஐந்து மணிக்கு, கொரோனாவுக்காக நேரம் பார்க்காமல், வாழ்க்கையை பணயம் வைத்து உழைக்கும் டாக்டர், நர்ஸ்களுக்கு கைதட்டி உற்சாகம் அளிக்குமாறு கூறினார். அதை பார்த்துவிட்டு நம் ஊரில் அருகில் இருக்கும் குடியிருப்புகளில் இருக்கும் மக்கள் நிறைய பேர், 12, 15, 20, 25 பேராக கூடி வெளியே வந்து, பேசியபடி, ஜாலியாக போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தனர். இது எந்த அளவு சீரியசான வைரஸ் என பாதி பேருக்கு தெரியவே இல்லை.
நியூசிலாந்து நாட்டில்..
எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தவர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி விட்டோம். டிரைவர்களை ஊருக்கு அனுப்பி விட்டோம். இதில் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நாங்கள் ஒன்றரை மாதம் முன் இந்திய அணியில், நியூசிலாந்து நாட்டில் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருந்தோம். அப்போது அங்கே சுற்றுலாவுக்கு வந்த சீன மக்களை பார்க்கும் போது, அங்கே இருந்த நியூசிலாந்து மக்கள் அச்சுறுத்தும் விதமாக பார்த்தனர். அந்த வைரஸை பரப்பி விடுவார்களோ என பயந்தனர்.
உலகப் போர்
அதாவது இது உலகப் போர் தான். இதை யாரும் நம் மீது திணிக்கவில்லை. இயற்கை நம் மீது திணித்து விட்டது. நம் பொதுவான வழக்கம் என்னவென்றால், இதற்கு இவன் தான் காரணம், இது அவன் தான் செய்து விட்டான் என யார் மீது பழி போடலாம் என்று தான் நினைப்போமே ஒழிய, இதற்கு இதுதான் தீர்வு என அதை தனித்துவப்படுத்தி, அன்றைக்கு அதற்கான சரியான விடை என பார்த்து ஒரு வழிமுறையை பார்த்து நாம் பின்பற்றவே மாட்டோம்.
மருத்துவ சேவைகள்
பிரதமர் என்பவர் நம்மால் தேர்வு செய்யப்பட்டவர். அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பின்பற்ற வேண்டியது நமது கடமை. உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இந்த நேரத்தில் அவர் கையெடுத்து கும்பிட்டார். அவர் சொன்னதில் முக்கிய கருத்து என்னவென்றால் அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் இருக்கும் மருத்துவ சேவைகள் உலகத்தரம் வாய்ந்தது. அங்கே ஒவ்வொரு குடிமகனுக்கும் அளிக்கப்படும் பாதுகாப்பு எந்த நாட்டிலேயும் இல்லை. நம் ஊரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கூட அந்த சேவைகள் கிடைக்காது.
எனக்கு வலிக்கிறது
அவர்களாலேயே இதை கட்டுப்படுத்த முடியவில்லை என அச்சுறுத்தும் வகையில் பிரதமர் பேசியது, எனக்கு உள்ளே வலிக்கிறது. அவர் அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலனை செய்து 21 நாட்கள் லாக்டவுன் உத்தரவு போட்டுள்ளார். ஆனால், பலர் வேலைக்கு போக வேண்டும். அதிகாரிகள் வேலைக்கு வருமாறு கூறுவார்கள் என சொல்கிறார்கள். ஆனால், இந்த காலத்தை நாம் கடந்து செல்லாவிட்டால், நமக்கு வேலை என்றே ஒன்றே இருக்காது. அடுத்த தலைமுறை என்றே ஒன்று இருப்பதே கஷ்டம்.
பின்தங்கி விடுவோம்
பிரதமர் என்ன சொன்னார் என்றால் இந்த 21 நாட்கள் நாம் வீட்டில் இருக்காவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்தங்கி விடுவோம் என்றார். அதற்கான விளக்கம் தான் நான் அளிப்பது. இது எப்படி பரவும் என்றால், நாம் ஒருவரை தேடி செல்லும் முன் அது பத்து பேருக்கு பரவும்.
உலகப் போர் விளக்கம்
நம் ஊரில் இருக்கும் மருத்துவமனைகள், டாக்டர்கள் இப்போதே அதிக நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களால் அந்த விதமான பரபரப்பை தாங்க முடியாது. அதாவது என்ன சொல்கிறார்கள் என்றால் உலகப் போரிலேயே கூட பத்து சதவீதம் தான் இறப்பு என்கிறார்கள். உலகப் போருக்கு நூறு பேர் சென்றால் பத்து பேர் தான் இறப்பார்கள் என்கிறார்கள்.
நடமாடும் டைம் பாம்
கடந்த இரண்டு வாரத்தில் இந்த கொரோனா வைரஸ்-ஆல் இத்தாலியில் 5000 பேரில் 500 பேர் இறந்துள்ளனர். அதைத் தவிர வெளியே இருக்கும் நிறைய பேர் நடமாடும் டைம் பாம். இதை நாம் உணர்வதே இல்லை. நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைவரும் ஊருக்கு செல்கிறார்களாம்.
வீட்டிலேயே இருக்க வேண்டும்
இது மருந்து கொடுத்து தீர்வு காணும் விஷயமே அல்ல. 21 நாட்கள் அனைவரும் மூடிக் கொண்டு வீட்டில் இருந்தால் இதன் தீவிரமும், அளவும் குறையும். மருத்துவர்களால் போகப் போக கட்டுப்படுத்த முடியும். இதுதான் ஒரே தீர்வு. இது ஒரு தலைமுறைக்கான விஷயம். இவ்வாறு அதிரடியாக பேசினார் அஸ்வின்.