இன்று சூப்பர் 4.. இந்தியா - பாக். மீண்டும் விறுவிறு மோதல்.. அணியில் மாற்றம் இருக்குமா?
Recommended Video

துபாய் : இன்று ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது. கடந்த நான்கு நாட்கள் முன்பு செப்டம்பர் 19 அன்று இந்தியா, பாகிஸ்தான் குரூப் சுற்றில் மோதியது குறிப்பிடத்தக்கது.
தற்போது சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ள இந்த இரு அணிகளில் இந்தியா தான் வெல்லும் என கணிக்கப்பட்டாலும், இன்று பாகிஸ்தான் முதல் மோதலின் தோல்விக்கு பழி தீர்க்க திட்டமிடும் என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மேலும், இந்த போட்டியில் வென்றால், இரண்டில் எந்த அணி வென்றாலும், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.
இன்றைய இந்தியா, பாகிஸ்தான் போட்டியில், இந்திய அணியின் சாதக பாதகங்களையும், இந்திய அணியில் என்ன மாற்றம் இருக்கும் என்பதை பற்றியும் பார்க்கலாம்.

ஆசிய கோப்பையில் இதுவரை
இந்தியா இந்த ஆசிய கோப்பையில் இதுவரை மூன்று போட்டிகளில் ஆடியுள்ளது. குரூப் சுற்றில் ஹாங்காங், பாகிஸ்தான் அணிகளையும், சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணியையும் வீழ்த்தியது இந்தியா. மறுபுறம், பாகிஸ்தான் அணி குரூப் சுற்றில் ஹாங்காங், சூப்பர் 4 பிரிவில் ஆப்கானிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளது. மூன்றில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது பாகிஸ்தான்.

கணிப்பில் வெற்றி பெறும் அணி
போட்டிக்கு முன் எந்த அணி வெல்லும் என்று கேட்டால், இந்தியா தான் வெல்லும் என இப்போதைக்கு எளிதாக கூற முடியும். காரணம், இந்தியா முதல் போட்டியில் அனுபவமற்ற ஹாங்காங் அணியிடம் தடுமாறி வெற்றி பெற்றது. எனினும், அடுத்த நாளே பாகிஸ்தான் அணியை அபராமாக வீழ்த்தி அந்த தடுமாற்றங்களில் இருந்து மீண்டது. மீண்டும், வங்கதேச அணியை ஆதிக்கம் செலுத்தி வீழ்த்தி, மனதளவில் உறுதியோடு உள்ளது. மாறாக, பாகிஸ்தான் அணி துவக்கத்தில் ஹாங்காங் அணியை புரட்டி எடுத்தது. ஆனால், அடுத்து இந்திய அணியிடம் தோல்வி, ஆப்கானிஸ்தான் அணியிடம் கடைசி வரை போராடி கடைசி ஓவரில் கிடைத்த வெற்றி என கொஞ்சம் மனதளவில் சோர்ந்து போய் உள்ளது. இதை வைத்துப் பார்த்தால், இந்தியா வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

காயத்தால் பாதிப்பில்லை
இந்திய அணியில் காயம் காரணமாக முக்கிய வீரர் பண்டியா, ஷர்துல் தாக்குர், அக்சர் பட்டேல் ஆகியோர் அணியில் இல்லை. இது பாதிப்பை ஏற்படுத்துமா என்ற யூகங்கள் எழுந்தது. ஆனால், புதிதாக உள்ளே வந்த ஜடேஜா அணியை மேலும் வலுப்படுத்தியுள்ளார். அவர் வங்கதேச அணிக்கு எதிராக சுழல் பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்தினார். நீண்ட காலம் கழித்து ஒருநாள் அணியில் இடம் பிடித்த ஜடேஜா தன் அனுபவத்தை அந்த போட்டியில் காட்டினார்.

யார் இடம் பிடிப்பார்கள்
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா இரண்டு வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே கொண்டு களம் இறங்கியது. மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்ற அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் அதே போல மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை கொண்டு களம் இறங்குவது சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை. பாகிஸ்தான் அணி சுழல் பந்துகளை எளிதாக அணுகும் என்பதால் இந்த போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் கொண்டு களம் இறங்க இந்தியா முடிவு செய்யும் என எதிர்பார்க்கலாம். அப்படி செய்தால், குல்தீப் அல்லது சாஹல், இருவரில் ஒருவரை வெளியேற்றிவிட்டு, கலீல் அஹ்மதுவை அணியில் சேர்க்கலாம்.


Click it and Unblock the Notifications