ஆசிய கோப்பை சூப்பர் 4-இல் பாகிஸ்தானை மிரட்டிய ஆப்கன்.. பாக். போராடி வென்றது
அபுதாபி : ஆசிய கோப்பை போட்டியில் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரண்டாவது போட்டியாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மோதிய போட்டி நடைபெற்றது.
ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் இந்தியா, வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
ஆப்கன் நிதான பேட்டிங்
ஆப்கன் எப்போதும் போல மிக நிதான ஆட்டத்தை கடைபிடித்தது. ஆப்கன் அணியில் ரஹ்மத் ஷா 36, ஹஸ்மாதுல்லா ஷாஹிடி 97*, அஸ்கர் ஆப்கான் 67 ரன்கள் அடிக்க அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் பந்துவீச்சு
பாகிஸ்தான் பந்துவீச்சில் திணறியது என்பதே உண்மை. மூன்றாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள், நான்காவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர் ஆப்கன் வீரர்கள். அவர்களை நீண்ட நேரம் களத்தில் விட்டு வைத்தனர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள். ஷாஹீன் ஷா 2, நவாஸ் 3, ஹசன் அலி 1 விக்கெட் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் பேட்டிங்
அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் பாக்கார் சமான் ரன் ஏதும் அடிக்காமல் வெளியேறி ஏமாற்றினார். அடுத்து ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக், பாபர் ஆசாம் ௨வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தனர். இமாம் உல் ஹக் 80 ரன்களில் ரன் அவுட் ஆனார். பாபர் ஆசாம் 66, சொஹைல் 13, சர்ப்ராஸ் 8, ஆசிப் அலி 7, நவாஸ் 10 ரன்களில் வெளியேறினர். கடைசி வரை நின்ற ஷோயப் மாலிக் 51 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் அணியை வெற்றி பெறச் செய்தார். அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கன் பந்துவீச்சு
ஆப்கன் அணி வெற்றிக்கு அருகே வந்து கடைசி ஓவரில் கோட்டை விட்டது. ரஷித் கான் 3, முஜீப் 2, குல்பாதின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஏற்கனவே, இலங்கை, வங்கதேசத்தை வீழ்த்திய ஆப்கன் அணி, பாகிஸ்தானுக்கு கடைசி ஓவர் வரை பயம் காட்டியுள்ளது. இனி, ஆப்கன் அணியை எளிதாக நினைக்கக் கூடாது என அழுத்தமாக பதிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications