துவக்கம் எப்படி?
துவக்க பேட்ஸ்மேன்கள் யார் யார் இருக்கிறார்கள் என பார்த்தால், ரோஹித் சர்மா, தவான் மற்றும் ராகுல். இதில் ரோஹித் சர்மா மட்டுமே நம்பிக்கை அளிக்கிறார். தவான் மற்றும் ராகுல் இங்கிலாந்து டெஸ்டில் அவுட்டான காட்சிகள் கண் முன் வந்து போவதால், கொஞ்சம் கவலையாகவே இருக்கிறது. என்றாலும், டெஸ்ட் வேறு, ஒருநாள் போட்டிகள் வேறு என நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம். இவர்களில் கேப்டன் ரோஹித் அனைத்து போட்டிகளிலும் இறங்கி விடுவார். மற்ற இரண்டு பேரும் ஒரே நேரத்தில் களத்தில் இறங்க வாய்ப்பு கிடைக்குமா? அப்படி இறங்கினால் மூன்றாவது இடத்தில் யார் இறங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
நடுவரிசை எப்படி?
அடுத்த வரிசையில், தோனி, மனிஷ் பாண்டே, அம்பத்தி ராயுடு, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக் இருக்கிறார்கள். இதில் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங் செய்தால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கும் என்பது போல் தான் இருக்கிறது அவர் நிலைமை. எனவே, தோனி இல்லாத பட்சத்தில் தினேஷ் உறுதியாக ஆடுவார். மற்றபடி சந்தேகம் தான். அம்பத்தி ராயுடுவுக்கு நிச்சயம் வாய்ப்பு கொடுத்து விளையாட வைக்க வேண்டும். மற்ற இருவரில், கேதார் ஜாதவ் பகுதி நேர பந்துவீச்சாளராகவும் செயல்படுவார் என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ராயுடு சரியாக ஆடாத பட்சத்தில் மனிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பளிக்கலாம்.
பந்துவீச்சு எப்படி?
சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப், சாஹல், அக்சர் மூவருமே தொடர்ந்து நல்ல செயல்பாட்டை காட்டி வருகிறார்கள். இவர்களில் யாரை விடுவது என்பது தான் பிரச்சனையாக இருக்கும். நிச்சயம் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களோடு களம் இறங்க வேண்டும். வேகப் பந்துவீச்சில் பும்ரா, புவனேஸ்வர் குமாரை விட்டுவிட முடியாது. அவர்கள் அணியில் இடம் பெற்றே ஆக வேண்டும். பண்டியா ஆல் ரவுண்டர் என உள்ளே வந்துவிடுவார். ஷர்துல் தாக்குர் மற்றும் கலீல் அகமதுவை வலு குறைந்த ஹாங்காங் அணிக்கு எதிராக பயன்படுத்தி பார்க்கலாம். அடுத்த நாள், பாகிஸ்தான் போட்டி இருப்பதால், முக்கிய வீரர்களான பும்ரா, புவிக்கு வேலைப்பளுவை குறைத்த மாதிரியும் இருக்கும்.
மொத்தத்தில் எப்படி?
இங்கிலாந்து பாதிப்பில் இருந்து குறைந்த இடைவெளியில் தவான் மீண்டு விடுவாரா? என்பது முதல் பிரச்சனை. தோனி கடைசியாக ஆடிய இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வேகமாக ரன் குவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். இப்போது அதில் இருந்து மீள்வாரா? என்ற கேள்வி உள்ளது. அவரது அனுபவம் நிச்சயம் அணிக்கு (ரோஹித்துக்கு) தேவை என்ற நிலையில், அவர் பேட்டிங்கில் கை கொடுத்தால் இந்தியா வெல்வது உறுதி. பண்டியா என்ன செய்யப் போகிறார்? என்பது மற்றொரு கேள்வி. அவர் தேவையான சமயங்களில் அணிக்கு கை கொடுப்பதில்லை. மற்ற வீரர்களை பற்றி பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. அவர்கள் சூழ்நிலை புரிந்து ஆடினாலே போதும்.
இந்தியாவிற்கு முதல் போட்டி வரும் 18ஆம் தேதி ஹாங்காங் உடன். அது பயிற்சிப் போட்டி போல தான் இருக்கப் போகிறது. 19ஆம் தேதி, ஒருநாள் இடைவெளி கூட இல்லாமல் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது இந்தியா. அதில் வெல்வது தான் முக்கியம்.