இந்தியா 245 எடுத்தது
முதலில் ஆடிய இந்தியா 245 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், ரன் குவிக்க தடுமாறினர் வீரர்கள். எனினும், ரோஹித் சர்மா, அம்பத்தி ராயுடு, ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். சுழல் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் 3 விக்கெட்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் நிதான ஆட்டம்
அடுத்து ஆடிய பாகிஸ்தான், நிதான ஆட்டத்தை ஆடியது. ஷேசாத், ஷர்ஜீல் கான் துவக்க இணை மட்டுமே சற்று வேகமாக ரன் குவித்தது. அவர்கள் சென்ற பின், ஹபீஸ் 117 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்களும் பொறுமையாக ஆட, கடைசி இரண்டு ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலைக்கு வந்தது ஆட்டம்.
புவனேஸ்வர் 2 விக்கெட்
49வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் வெறும் மூன்று ரன்கள் மட்டும் கொடுத்தார். பாகிஸ்தானின் உமர் குல் மற்றும் தல்ஹாவை வீழ்த்தினார். பாகிஸ்தான் 236 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து இருந்தது.
வெற்றிக்கு அருகில் இந்தியா
கடைசி ஓவரை வீச அஸ்வின் அழைக்கப்பட்டார். அது வரை குறைந்த ரன்கள் கொடுத்து இருந்தவர் அஸ்வின் தான். அவர் முதல் பந்தில் சயீத் அஜ்மல் ஆட்டமிழக்க, பாகிஸ்தானுக்கு இன்னும் 8 ரன்கள் தேவை என்ற நிலையில், ஒரு விக்கெட் மட்டுமே கையில் இருந்தது.
அப்ரிடி கலக்கல்
அஸ்வின் வீசிய இரண்டாம் பந்தில் ஜுனைத் கான் ஒரு ரன் எடுக்க, அடுத்து அப்ரிடி பேட்டிங் செய்ய வாய்ப்பு வந்தது. அப்ரிடி தூக்கி அடிப்பார். கேட்ச் பிடித்துவிடலாம் என திட்டம் போட்டது இந்தியா. அஸ்வின் அவருக்கு அடிக்க வசதியாக பந்து போட்டார். ஆனால், அவர் கேட்ச் கொடுக்காமல் பந்தை சிக்சர் அடித்தார். அடுத்த பந்தும் அதே போல சிக்சர் அடிக்க, பாகிஸ்தான் வென்றது. இந்தியா வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைந்தது.