இளம் இந்திய அணி
2007 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் தோனி என நான்கே நான்கு அனுபவ வீரர்கள் மட்டுமே இருந்தனர். மற்றபடி அது இளம் வீரர்கள் அணி தான். ஒரு கட்டத்தில் லீக் சுற்றில் சொந்த மண்ணில் ஆடும் இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் தான் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும் என்ற நிலை.
ஒரே ஓவரில் ஆறு சிக்ஸ்
அந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்ட்ரூ பிளின்டாப், யுவராஜ் சிங்கை சீண்டி விட, அடுத்த ஓவரை வீசிய ஸ்டூவர்ட் பிராடை பிளந்து கட்டி, ஒரே ஓவரின் ஆறு பந்துகளையும் ஆறு சிக்ஸர் விளாசினார் யுவராஜ் சிங். அது இன்று வரை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத போட்டி ஆகும்.
முறியடிக்கப்படாத சாதனை
அந்த போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்தார் யுவராஜ் சிங். அந்த டி20 சாதனை இன்று வரை சர்வதேச அரங்கில் முறியடிக்கப்படவில்லை. அந்த போட்டியில் யுவராஜ் சிங் அதிரடியால் இந்தியா வென்றது. அடுத்து அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை சந்தித்தது.
வெறியாட்டம் ஆடிய யுவராஜ்
அந்தப் போட்டியிலும் வெறியாட்டம் ஆடினார் யுவராஜ் சிங். மற்ற பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாத நிலையில், யுவராஜ் சிங் 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். இந்தப் போட்டியில் ஐந்து சிக்ஸர் அடித்து இருந்தார்.
புகார் எழுப்பிய ஆஸி.
இந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இளம் இந்திய அணி, அனுபவ வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ என்னவோ, ஒரு அதிரடி புகாரை எழுப்பினர்.
தேவையற்ற விசாரணை
அதன் பின் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் யுவராஜ் சிங்கை சந்தித்துள்ளார். யுவராஜ் சிங் அதிரடி ஆட்டம் ஆடிய பேட்டின் பின்புறம் ஃபைபர் பயன்படுத்தப்பட்டுள்ளதா? அது விதிகளுக்கு உட்பட்டதா? என தேவையற்ற முறையில் விசாரணை செய்துள்ளார்.
மேட்ச் ரெப்ரீ பார்த்து விட்டாரா?
மேலும், மேட்ச் ரெப்ரீ இந்த பேட்டை பார்த்து விட்டாரா? என கேட்டுள்ளார். அப்போது யுவராஜ் சிங் வேண்டும் என்றால், நீங்கள் அதை அவரிடம் சொல்லி பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என கூறி உள்ளார். அடுத்து கில்கிறிஸ்ட்டும் விசாரணை செய்துள்ளார்.
கில்கிறிஸ்ட் விசாரணை
மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்களுள் ஒருவரான ஆடம் கில்கிறிஸ்ட் இந்திய வீரர்களின் பேட்டை யார் தயாரிக்கிறார்கள் என கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி சந்தேகம் அடைந்ததோடு, மேட்ச் ரெப்ரீ வரை இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றது. எனினும், எந்த சிக்கலும் எழவில்லை.
ஆஸி மனநிலை
யுவராஜ் சிங் கூறிய இந்த சம்பவம் மூலம், அந்த காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினர் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் இருந்தது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியினர் என்னென்ன "டகால்டி வேலை" எல்லாம் செய்துள்ளனர் என்பதை இப்போதும் யூட்யூபில் காணலாம்.
ஸ்குவாஷ் பந்து ட்ரிக்
யுவராஜ் சிங் பேட் பற்றி கேள்வி கேட்ட அதே கில்கிறிஸ்ட், டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் நடைபெற்ற 2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தன் கிளவுஸில் ஸ்குவாஷ் பந்தை வைத்துக் கொண்டு கூடுதல் க்ரிப் பெற்று, சதம் அடித்தார். அது விதிகளில் அதை பயன்படுத்தலாமா? என்ற தெளிவு இல்லாததால் அவர் அப்போது தப்பினார். அது தவறில்லை என இன்று வரை ஆஸ்திரேலியா கூறி வருகிறது. ஆனால், அதன் பின் கில்கிறிஸ்ட் உட்பட எந்த பேட்ஸ்மேனும் ஸ்குவாஷ் பந்தை பயன்படுத்தவில்லை.