இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு பாபர் அசாம் என்று முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அக்தர், பாபர் அசாமை எளிதாக நினைத்து பந்துவீசினால், இழப்பு எதிரணி பந்துவீச்சாளர்களுக்குத்தான் என்று உச்சி முகர்ந்துள்ளார்.
பாகிஸ்தானின் சர்வதேச டி20 போட்டிகளின் கேப்டனாக உள்ள பாபர் அசாம், பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்காக கராச்சி கிங்ஸ் அணியில் களமிறங்கி ஆடி வருகிறார்.
சர்வதேச டி20 போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துள்ளார் பாகிஸ்தானின் பாபர் அசாம். பாகிஸ்தானின் டி20 போட்டிகளின் கேப்டனாக உள்ள இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்காக கராச்சி கிங்ஸ் அணியில் களமிறங்கி ஆடி வருகிறார். இவர் ஆடிய கடந்த 9 போட்டிகளில் 313 ரன்களை குவித்து சராசரியாக 52.16ஐ பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள போட்டிகளை லாகூரிலிருந்து கராச்சிக்கு மாற்றவும் அணிகள் கோரிக்கை விடுத்துள்ளன. வரும் 17 மற்றும் 18 தேதிகளில் இந்த தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பெருமை மிகு கண்டுபிடிப்பு பாபர் அசாம் என்று கூறியுள்ளார். தன்னுடைய யூடியூப் பக்கத்தில் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் குறித்த வர்ணனைகளை மேற்கொண்டுவரும் சோயிப் அக்தர், தற்போது தன்னுடைய நாட்டு வீரர் பாபர் அசாமை கையில் எடுத்துள்ளார்.
வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள அக்தர், பாபர் அசாமை எளிதான விக்கெட்டாக நினைத்து பந்துவீசினால், எதிரணி பௌலர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.