தோல்வியே இல்லை
கடந்த 17ம் தேதி நடைபெற்று முடிந்த முத்தரப்பு போட்டியில் எதிரணிகளை மிரள வைத்துள்ளது வங்கதேசம். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை வீழ்த்தி கோப்பையை தன் வசப்படுத்தி இருக்கிறது. இந்த தொடரில் வங்கதேசம் ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாதது குறிப்பிடத்தக்கது
மறக்க முடியாத போட்டி
கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நிதாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இலங்கையை பந்தாடி இந்தியாவுடன் இறுதி போட்டியில் குதித்தது வங்கதேச அணி. 20 ஓவர்களுக்கு 166 ரன்களை குவித்து இந்தியாவுக்கு வலுவான இலக்கையும் நிர்ணயித்தது வங்கதேசம். அந்த போட்டியில் இந்தியா போராடி தான் கோப்பையை வென்றது.
கடைசி பந்தில் வெற்றி
இதே போல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளை வீழ்த்தி இறுதிபோட்டியில் இந்தியாவை சந்தித்தது. அந்த ஆட்டத்திலும் இந்திய அணி கடைசி பந்தில் தான் போராடி வெற்றி பெற்றது.
நெருக்கடி அளிக்கும்
என்னதான் எதிரணிகள் வெற்றிபெற்றாலும் விடா முயற்சியுடன் இறுதி வரை மிகுந்த நெருக்கடி அளிப்பதில் வங்கதேச அணி சற்று கில்லி என்றே சொல்லலாம். எதிர்வரும் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்தை மிக எளிதாக கருதிவிட முடியாது என்று கூறியிருக்கிறார் அனில் கும்ப்ளே.
பலம் வாய்ந்த வங்கதேசம்
மோர்டாசா தலைமையில் களமிறங்கும் 15 பேர் கொண்ட வங்கதேச அணி ஐசிசி தர வரிசையில் 7ம் இடத்தில் உள்ளது. ஷாகிப் அல் ஹாசன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், முஸ்ஃபிகுர் ரஹீம். லிட்டன் தாஸ் ரூபல் ஹூசைன் என அனுபவ வீரர்கள் புடை சூழ களமிறங்க காத்திருக்கிறது வங்கதேசம். பலம்வாய்ந்த அணிகளுக்கு கோப்பையை வெல்ல தடைக்கல்லாக நிற்குமா வங்கதேசம்..? பொறுத்திருந்து பார்க்கலாம்.