நலிவடைந்துள்ள நார்த் ஈஸ்ட்
இந்தியா பல விஷயங்களுக்காக சிறிது சிறிதாக பிரிந்து கிடந்தாலும் எல்லாரும் ஒன்றாக ரசிப்பது கிரிக்கெட் மட்டும்தான். கிரிக்கெட்டை இந்தியாவின் தேசிய மதம் என்று கூட குறிப்பிடலாம். காஷ்மீரையும், கன்னியாகுமரியையும் 'கம்' போட்டு ஒட்டவைத்திருப்பது இந்தக் கிரிக்கெட் மட்டும்தான். ஆனாலும் இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் மட்டும் விதி விலக்கு. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் விளையாட்டு வீரர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். அதேபோல் விளையாட்டுக்கான ரசிகர்களும் இங்குதான் மிகவும் குறைவாக உள்ளனர். மேலும் இங்கு விளையாட்டு பயிற்சி பெறுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளும் குறைவாகவே இருக்கின்றது.
நார்த் ஈஸ்டுக்கு உதவி
இந்த நிலையில் விளையாட்டுத் துறையில் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் வட கிழக்கு மாநிலங்களுக்கு உதவ பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அதன்படி வட கிழக்கு மாநிலங்களில் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்காக ரூபாய் 50 கோடி நிதி உதவி செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவலை இன்று வெளியிட்டார் பிசிசிஐன் நிதிக் குழு தலைவர் டால்மியா.
என்னவெல்லாம் செய்யப்படும்
மேலும் இந்த 50 கோடியை வைத்து அந்தப் பகுதியில் என்னவெல்லாம் செய்யப்படும் என்று முடிவும் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அங்கு சிறிய அளவில் நிறைய கிரிக்கெட் மைதானங்கள், பெரிய அளவில் சில மைதானங்கள், அனைத்து வசதிகளையும் கொண்ட உள்விளையாட்டு அரங்கங்கள் என நிறைய வசதிகள் இதன்முலம் ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இது அனைத்தையும் பிசிசிஐ முன்னின்று நடத்தும் என்றும் கூறியுள்ளது.
நார்த் ஈஸ்ட்டில் புது கிரிக்கெட் தொடர்கள்
அதுமட்டும் இல்லாமல் வடகிழக்கு மாநிலங்களில் கிரிக்கெட் போட்டிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் அங்கு சில தொடர்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் நிறைய விளையாட்டுப் போட்டிகள், பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் என நிறைய போட்டிகள் நடத்தி கிரிக்கெட்டை அங்கு வளர்க்கும் முடிவில் இறங்கி இருக்கிறது பிசிசிஐ.