ரஞ்சி ட்ராபி தொடர்
இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் தொடர் தான் ரஞ்சி ட்ராபி. நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் ஆடி, சாதனை செய்த வீரர்கள் தான் பெரும்பாலும் இந்திய அணியில் இடம் பிடித்து வந்தார்கள். ஐபிஎல் தொடருக்கு பின் அந்த நிலை லேசாக மாறியது. எனினும், இன்னும் ரஞ்சி ட்ராபி அதன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை.
அரையிறுதிப் போட்டி
ரஞ்சி ட்ராபி அரையிறுதிப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன, அதில் கர்நாடகா அணியை பெங்கால் அணி வீழ்த்தி 13 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி ட்ராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறுபுறம் குஜராத் அணியை வீழ்த்தி, சௌராஷ்டிரா அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
பரபர இறுதிப் போட்டி
இறுதிப் போட்டியில் பெங்கால் - சௌராஷ்டிரா அணிகள் மோத உள்ளன. சௌராஷ்டிரா அணி கடந்த எட்டு வருடங்களில், தன் நான்காவது ரஞ்சி ட்ராபி இறுதிப் போட்டியில் ஆட உள்ளது. கடந்த ஆண்டு அந்த அணி, விதர்பா அணியிடம் தோல்வி அடைந்து இருந்தது.
முக்கிய வீரர்கள் பங்கேற்பு
ரஞ்சி ட்ராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர்களும் இடம் பெற உள்ளனர். சௌராஷ்டிரா அணியில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன புஜாரா இடம் பெற உள்ளார். பெங்கால் அணியில் டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் விரிதிமான் சாஹா இடம் பெற உள்ளார்.
அனுமதி கேட்ட சௌராஷ்டிரா நிர்வாகம்
இந்த நிலையில், தங்கள் அணியின் மற்றொரு நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜாவையும் ரஞ்சி ட்ராபி இறுதிப் போட்டியில் ஆட வைக்க பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டு இருந்தது சௌராஷ்டிரா மாநில கிரிக்கெட் அமைப்பு. ஜடேஜா ஆடினால் அது அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என கூறி இருந்தது.
கங்குலி திட்டவட்ட மறுப்பு
இதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலியே நேரடியாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதில் ஜடேஜா இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், அவரை ரஞ்சி ட்ராபி தொடரில் ஆட அனுமதிக்க முடியாது என கூறி உள்ளாராம்.
போட்டி வைக்காதீர்கள்
நாடு தான் முதலில் முக்கியம் என கங்குலி கூறி உள்ள நிலையில், சௌராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெயதேவ் ஷா, ரஞ்சி ட்ராபி இறுதிப் போட்டியின் போது ஏன் சர்வதேச போட்டி நடத்துகிறீர்கள்? என ஒரு பகீர் கேள்வியை முன் வைத்துள்ளார்.
ஐபிஎல்-லுக்கு ஒரு நியாயம்?
அவர் கேட்பதில் ஒரு நியாயமும் உள்ளது. ஐபிஎல் ஒரு உள்ளூர் தொடர் தான். அந்த தொடரின் போது மட்டும் சர்வதேச போட்டிகளில் இந்தியா பங்கேற்காதவாறு பார்த்துக் கொள்கிறது இந்திய அணி. காரணம், அப்படி நடந்தால் அது ஐபிஎல் தொடரில் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.
ஷமி கூட ஆடலாம்
ஜடேஜாவை கேட்டுள்ள ஜெயதேவ் ஷா, நட்சத்திர வீரர்கள் மாநில அணியில் ஆடினால் தான் ரஞ்சி ட்ராபி மக்களை சென்று அடையும் என்றும் தன் நியாயத்தை கூறி உள்ளார். சௌராஷ்டிரா அணியை எதிர்த்து ஆட உள்ள பெங்கால் அணி கூட இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷமியை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.