மும்பை: ஐபிஎல் போட்டியின் போது ஊழல் அணுகுமுறை ஈடுபட்ட மும்பை ரஞ்சி வீரர் ஹிகன் ஷாவை இந்திய கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்தது. இது மும்பை கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளின் போது ஊழல் அணுகுமுறையில் ஈடுபட்டதாக மும்பை ரஞ்சி வீரர் ஹகென் ஷாவை சஸ்பெண்ட் செய்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்து உள்ளது.
30 வயதான ஹிகென் ஷா சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவர் எந்த ஐபிஎல் அணியிலும் இடம்பெறவில்லை. முதல்தர கிரிக்கெட்டில் 37 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 2160 ரன்கள் எடுத்து உள்ளார். சராசரி 42.35 ஆகும்.
ஹிகென் தன்னுடன் முதல்தர போட்டிகளில் விளையாடிய வீரர் ஒருவருடன் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட அணுகி உள்ளார். முதல்தர போட்டிகளில் ஆடிய அந்த வீரர், ஒரு ஐபிஎல் அணிக்காக தற்போது ஆடிக்கொண்டுள்ளார். ஹிகெனின் இந்த அணுகுமுறை குறித்து அந்த வீரர் உடனடியாக தன்னுடைய அணி நிர்வாகத்திற்கு தெரிவித்து உள்ளார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய ஊழல் தடுப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்து உள்ளது.
இதை தொடர்ந்து இது குறித்து விசாரணைக்கு பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பிரவீன் தாம்பேவைத்தான், ஹிகென் அணுகியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.