வருகிறது மிஷன் 2024.. இந்திய அணியின் ஃபார்முலாவை முற்றிலும் மாற்றிய பிசிசிஐ.. ஜனவரி மாதம் முதல் அமல்
மும்பை: இந்திய அணியின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது பிசிசிஐ.
டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான அனைத்து தகுதிகளுடனும் சென்ற இந்திய அணி, அரையிறுதியில் துரதிஷ்டவசமாக தோல்வியை தழுவி வெளியேறியது.
இதனையடுத்து இந்திய அணியின் தோல்விக்காக பிசிசிஐ பலக்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி சேட்டன் சர்மா தலைமையிலான ஒட்டுமொத்த தேர்வுக்குழுவையும் நீக்கியது.

2024ம் ஆண்டுக்கான திட்டம்
இதனைத்தொடர்ந்து தற்போது மிஷன் 2024 என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது அடுத்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. அதற்கான அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட ஆலோசனைகள் நடந்து வருகின்றன.

எந்தெந்த வீரர்கள்?
அதன்படி இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை இனி டி20 கிரிக்கெட் அணியில் சேர்க்க மாட்டோம் என தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. இதே போல ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் என 30 வயதுக்கு மேல் இருக்கும் பல வீரர்களையும் விடுவிக்க முடிவெடுத்துள்ளனர்.

ஹர்திக் பாண்ட்யா
சீனியர்களை நீக்கிய பிறகு ஹர்திக் பாண்ட்யாவின் தலைமையில் புதிய டி20 படையை உருவாக்கவுள்ளனர். இதற்காக நடத்தப்பட்ட சோதனை முயற்சியான நியூசிலாந்து தொடரில் பாண்ட்யா வெற்றி காண்டுவிட்டார். இந்த திட்டங்கள் வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை தொடர்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இருந்து இந்தியாவின் முழு நேர டி20 கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா அறிவிக்கப்படவுள்ளார். புதிய தேர்வுக்குழு இம்மாதம் பதவியேற்கும். அவர்களின் முதல் முடிவே இதுவாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications