ஐசிசி மறுப்பு
ஆண்டர்சன் மற்றும் ஜடேஜா மோதல் விவகாரத்தில் போதிய சாட்சிகள் இல்லை என்று ஐசிசி விசாரணை குழு ஆண்டர்சனை விடுவித்தது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும் ஐசிசி இந்தியாவுக்கு வாய்ப்பளிக்க மறுத்துவிட்டது.
ரூல்ச மாற்று
இந்நிலையில் செய்திநிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல், ஐசிசியின் தற்போதைய விதிமுறை மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தற்போதுள்ள நடைமுறையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நேரடியாக மேல் முறையீடு செய்ய முடியாது. ஐசிசி அனுமதி தேவைப்படுகிறது.
ஓட்டையை அடைக்க வேண்டும்
எனவே இதுபோன்ற நடைமுறை மாற்றப்பட வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளையும், வக்கீல்களையும் புதிய விதிமுறைகளை தொகுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளேன். எந்த இடத்தில் சட்டத்தில் ஓட்டையுள்ளதோ, அந்த இடத்தை சரி செய்ய வேண்டும் என்பதால் அதை கண்டறியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்.
சிசிடிவி ஏன் செயல்படவில்லை?
மோதல் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா ஆன் செய்யப்படவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதை ஏற்க முடியாது. நல்ல போட்டித்தொடர் நடைபெற வேண்டுமானால் இப்படியெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க கூடாது. வீடியோ ஆதாரங்கள் இல்லை என்பதை சுட்டிக்காண்பித்தும், இதுபோல இனிமேல் எப்போதும் நடக்க கூடாது என்பதையும் வலியுறுத்தி ஐசிசிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடிதம் எழுத உள்ளேன். இவ்வாறு சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.