சிட்னி : கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தொடர்ந்து சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளின் செயல்பாடுகள் நிலைகுலைந்து வருகின்றன. ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மோதவிருந்த நிலையில், தற்போது இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக அளவில் 4,700 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் தொடரும் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணியும் அடுத்துவரும் 2 ஒருநாள் போட்டிகளை ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் விளையாட உள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் 3 டி20 தொடர்களில் மோதவிருந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியின் சுற்றுப்பயணமும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
வரும் 22ம் தேதி தர்பன், பீட்டர்மாரிட்ஸ்பர்க் மற்றும் கிழக்கு லண்டனில் ஒருநாள் போட்டிகளும் இதேபோல கிழக்கு லண்டன், பெனானியில் டி20 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நியூசிலாந்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெறவிருந்த சாப்பல் ஹாட்லி தொடரின் போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.
இந்த டி20 போட்டிகள் மார்ச் 24ம் தேதி துவங்கி துனேதின், ஆக்லாந்து மற்றும் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் அறிவித்துள்ளார். ரசிகர்கள், வீரர்கள், ஊழியர்கள் உள்ளிட்டவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.