மும்பை: இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகள், மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடப்பதும் சந்தேகமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 51 நாட்களில் 60 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா 14 ஆட்டங்களில் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்றொரு அணியுடன் சொந்த மண்ணில் ஒருமுறையும், எதிரணியின் சொந்த மண்ணில் ஒருமுறையும் விளையாடுகின்றன.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் திரும்பியுள்ளதால், இந்த சீசன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்தன. அந்த நேரத்தில், 10ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடந்தது. இந்தப் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன.
போராட்டங்கள் தொடர்ந்ததால், சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் மற்ற 6 போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், புனேயில் சிஎஸ்கே போட்டிகள் நடத்துவதால், மைதானத்தின் பராமரிப்புக்கு அதிக தண்ணீர் செலவாகும். அதனால் போட்டிகளை நடத்தக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
போட்டிகளுக்காக, புனேயில் உள்ள பாவணா அணையில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு, மாநில அரசும், மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கமும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி, பாவணா அணையில் இருந்து மைதானத்தின் பராமரிப்புக்கு தண்ணீர் எடுக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த ஒப்பந்தமே செல்லாது. அதனால் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை, பாவணா அணையில் இருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது என்று, மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால், புனே மைதானத்தில் திட்டமிட்டப்படி போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நாளை மறுநாள் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இங்கு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது வேறு மைதானத்துக்கு மாற்றப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.