
2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில்
தடையால் இரண்டு ஆண்டுகள் விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் களமிறங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
சென்னையில் போட்டி நடக்க உள்ளதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பிலும், ஆர்வத்திலும் உள்ளனர். கேப்டன் கூல், தல, நம்ம வீட்டு பிள்ளை டோணியின் தலைமையிலான சிஎஸ்கே அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடுவதால், இன்றைய போட்டி டெம்பரேச்சரை ஏற்றியுள்ளது. சென்னை ரசிகர்கள் மஞ்சள் ஜூரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. அதில் 10 முறை சிஎஸ்கே வென்றுள்ளது. கொல்கத்தா 6 முறை
வென்றுள்ளது. சென்னை மைதானத்தில் இரு அணிகளும் விளையாடிய 7 போட்டிகளில் சிஎஸ்கே 5 முறை வென்றுள்ளது.

எதிர்ப்புகளை மீறி போட்டி நடக்குமா
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதற்கு ஆதரவாக சென்னையில் போட்டியை நடத்தக் கூடாது என்றும், அவ்வாறு நடந்தால் போராட்டம் நடக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என, ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ளது. போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிரடிக்கு சிஎஸ்கே தயார்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில், 166 வெற்றி இலக்குடன் சிஎஸ்கே விளையாடியது. ஒரு கட்டத்தில், 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது, பிராவோ அதிரடியாக விளையாடி 7 சிக்சர்களை பறக்க விட்டு, 30 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். கடைசியில் வெற்றியை உறுதி செய்த கேதார் ஜாதவ், காயம் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார். இருந்தாலும், டோணியுடன், சின்ன தல ரெய்னா, ஷேன் வாட்சன், அம்பட்டி ராயுடு என்று அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். அதனால், இன்றைய போட்டியில் சிஎஸ்கேயின் அதிரடி ஆதிக்க ஆட்டம் தொடரும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

டோணியிடம் பாடம் கற்பார்
தங்களுடைய முதல் ஆட்டத்தில் தமிழர் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா அணி, வலுவான பெங்களூரு அணியை அபாரமாக வென்றது. சமீபத்தில் இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பை போட்டியில் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வென்று தந்தவர் தினேஷ் கார்த்திக்.
கடைசி நேரத்தில் அதிரடியாக பினிஷிங் செய்வதில் டோணி பிரின்சிபாலாக இருக்கும் பல்கலையில் நான் மாணவன் என்று அப்போது தினேஷ் கூறினார். டோணிமிகச் சிறந்த மேட்ச் பினிஷர். அவர் உள்ளதால், சிஎஸ்கேயில் உள்ள ஒவ்வொருவரும் சிறந்த பினிஷர்களாக மாறியுள்ளதை மும்பை போட்டியில் பார்த்தோம்.
இன்றைய போட்டியில் மாணவன் தினேஷ் கார்த்திக்குக்கு மற்றொரு பாடத்தை டோணி கற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications