மெகா ஏலம்
அடுத்த ஆண்டு புதியதாக 2 ஐ.பி.எல். அணிகள் விளையாட உள்ளன. இதற்காக மெகா ஏலத்தை பி.சி.சி.ஐ. நடத்த உள்ளது. இதில் அனைத்து அணிகளும் பங்கேற்க உள்ளன. அனைத்து வீரர்களையும் விடுவித்து புதிய வீரர்களை தேர்வு செய்யலாம், அல்லது அதிகபட்சம் 4 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.இதில் அதிகபட்சம் 3 இந்திய வீரர்கள் மற்றும் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்களை வரும் 30ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்பது விதி.
கேப்டன் தோனி
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வீரராக கேப்டன் தோனியை தக்க வைக்க உள்ளது.இதற்காக தோனிக்கு சி.எஸ்.கே. அணி 16 கோடி ரூபாய் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தோனி தம்மை மூன்றாவது, அல்லது நான்காவது வீரராக தேர்வு செய்து, வேறொரு இளம் வீரருக்கு அதிக ஊதியத்தை தர கூறியதாகவும், ஆனால் சி.எஸ்.கே. இதனை மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜடேஜா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ஜடேஜா இரண்டாவது வீரராக தேர்வு செய்யப்பட உள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என கலக்கும் ஜடேஜா ஆட்டத்தின் போக்கை தனியாளாக திசை மாற்ற கூடியவர். ஜடேஜாவுக்கு இம்முறை 12 கோடி ரூபாய் வழங்க சி.எஸ்.கே.முடிவு செய்துள்ளது. கடந்த முறை அவர் 7 கோடி ரூபாய் தான் ஊதியம் பெற்றார்.
டுபிளசிஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலமாக ஆஸ்தான தொடக்க வீரராக இருக்கும் டுபிளசிஸ்க்கு 8 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்து கொள்ள அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. அனுபவமும், அதிரடியும் கலவையாக விளங்கும் டுபிளசிஸ் இன்னும் 3 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார் என்பதால் அவரை தக்க வைக்க சி.எஸ்.கே. முடிவு எடுத்துள்ளது.
Recommended Video
ருத்துராஜ்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நாளைய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ருத்துராஜ்க்கு 6 கோடி ரூபாய் கொடுத்து அணியில் தக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் அதிக ரன்கள் விளாசியதற்காக ஆரஞ்ச் தோப்பியை வென்ற ருத்துராஜ், சி.எஸ்.கே.வின் எதிர்காலமாக கருதப்பட உள்ளார்.
பிரியும் குடும்பம்
சென்னை ரசிகர்களால் அன்புடன் சின்ன தல என்று அழைக்கப்படும் ரெய்னாவை விடுவிக்க சி.எஸ்.கே. முடிவு எடுத்துள்ளது. ரெய்னா பார்மில் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரெய்னாவை ஏலத்தில் மீண்டும் வாங்க சி.எஸ்.கே. முயற்சிக்கும். Right to Match card இல்லாததால் ரெய்னா மற்ற அணிக்காக விளையாடுவதற்கே அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதே போன்று ராயுடு, சுட்டி குழந்தை சாம் கரண் ஆகியோரும் சென்னை அணியை விட்டு பிரிய அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது.