தேர்வுக்குழு நீக்கம்
ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு மாற்றத்தை பிசிசிஐ கொண்டு வந்தது. சேட்டன் சர்மா தலைமையிலான ஒட்டுமொத்த தேர்வாளர் குழுவையும் நீக்கி அதிரடி காட்டியது. அந்த குழு தேர்ந்தெடுத்த அணி 4வது முறையாக ஒரு பெரும் தொடரில் இருந்து கோப்பை வெல்லாமல் வெளியேறியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021 டி20 உலகக்கோப்பை, ஆசிய கோப்பை தொடர் 2022, 2022 டி20 உலகக்கோப்பை என தொடர்ச்சியாக ஏமாற்றங்கள் தான்.
தினேஷ் கார்த்திக்கின் பேச்சு
இந்நிலையில் இந்த நீக்கம் குறித்து தினேஷ் கார்த்திக் பேசியுள்ளார். அதில், சுவாரஸ்யமான முடிவை எடுத்துள்ளனர். நாங்கள் யாருமே இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. எனினும் புதிய தேர்வாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்கள் எப்படி விஷயங்களை செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் எனக்கூறினார்.
சாதாரணம் அல்ல
தொடர்ந்து பேசிய அவர், நீக்கம் என்ற வார்த்தை அடிக்கடி கேட்டு வருகிறேன். ஆனால் அவர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது என்பது தான் உண்மை. அவர்களின் பணி அவ்வளவு எளிதல்ல. 40 - 45 வீரர்கள் தகுதியுடனும், நல்ல ஃபார்மிலும் உள்ள போது, அதில் இருந்து 15 வீரர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது கடினமான பணி. அதற்கு பாராட்டியே ஆக வேண்டும்.
தினேஷின் எதிர்காலம்
டி20 உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்-க்கு பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் வாய்ப்பு கிடைத்திருந்தது. 37 வயதாகும் அவர் உலகக்கோப்பையை வென்ற கையுடன் ஓய்வு பெறலாம் என இருந்திருக்கலாம். ஆனால் அது கனவாகவே சென்றது. அவருக்கு இனியும் டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே ஆகும்.