சென்னை: காவிரி வாரியத்துக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போது கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடுவீரா? என்ற கேள்விக்கு தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் காவிரி பிரச்சினை சூடு பிடித்துள்ளதால் இந்த போட்டிகள் நடத்த கூடாது என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எனினும் திட்டமிட்ட தேதிகளில் போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை நிறுத்திவிடலாம் அல்லது வீரர்கள், இளைஞர்கள் கருப்பு கொடி அணிந்து கொண்டு விளையாடலாம் என்று ரஜினிகாந்த் யோசனை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு பயிற்சியில் ஈடுபட வீரர்கள் இன்று மைதானத்துக்கு வந்தனர். அப்போது கொல்கத்தா அணியின் கேப்டன் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கிடம் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு விளையாடுவீரா, தமிழராக உங்கள் எதிர்ப்பை பதிவு செய்வீர்களா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.