
பும்ரா காயம்
பும்ரா உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்றார். அதன் பின் ஓய்வில் இருந்தார். தென்னாப்பிரிக்கா தொடரில் அவர் பங்கேற்க தயார் ஆன போது முதுகில் உலகக்கோப்பை காயம் இருப்பது தெரிய வந்தது.

தரமான சிகிச்சை இல்லை
இந்திய அணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்கள் பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால், அங்கே தரமான சிகிச்சை மற்றும் வசதிகள் இல்லை என கருதும் மூத்த இந்திய வீரர்கள் அங்கே செல்வது இல்லை.

வெளிநாடு சென்றார்
பும்ரா தன் காயம் குறித்து சிகிச்சை பெற இங்கிலாந்து கிளம்பிச் சென்றார். இங்கிலாந்தில் சில நாட்கள் இருந்த அவர், பெரிய சிகிச்சைகள் எதுவும் தேவை இல்லை, உடற் பயிற்சி மூலமான சிகிச்சைகள் மட்டுமே போதும் என தெரிந்த பின் இந்தியா திரும்பினார்.

உடற்தகுதி பயிற்சி
அவரது காயம் மெதுவாக குணமான நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு தன் உடற் தகுதியை மேம்படுத்திக் கொள்ள, தேசிய கிரிக்கெட் அகாடமியை நாடாமல் தனிப்பட்ட முறையில் ஒரு நிபுணரை பணி அமர்த்திக் கொண்டார் பும்ரா.

நிபுணர் யார்?
அந்த நிபுணர் ரஜினிகாந்த் சிவஞானம். அவர் இந்திய அணிக்கான பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர். ஆனால், அவர் விளையாட்டு வீரர்களுக்கு உடற் தகுதி சிகிச்சைகள் அளிப்பதில் மிகச் சிறந்த நிபுணர் என கூறப்படுகிறது.

சிகிச்சை பெற்றார்
இந்திய அணியால் நிராகரிக்கப்பட்டாலும், ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் அவரை உடனடியாக பணியில் சேர்த்துக் கொண்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்-இல் ஆடி வரும் பும்ரா, டெல்லி கேபிடல்ஸ் அணியில் பணியில் இருப்பவரிடம் தனிப்பட்ட முறையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பிசிசிஐ புகைச்சல்
ஐபிஎல் அணிகள் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், பிசிசிஐ வட்டாரத்தில் இது புகைச்சலை ஏற்படுத்தியது. தேசிய கிரிக்கெட் அகாடமியை இந்திய வீரர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருவது சர்ச்சை ஆனது.

தேசிய கிரிக்கெட் அகாடமி மறுப்பு
இந்த நிலையில், பும்ரா முழு உடற்தகுதி பெற்று விட்டதாக இந்திய அணி நிர்வாகம் தகவல் கூறியது. பும்ரா தேசிய கிரிக்கெட் அகாடமியில் பரிசோதனை செய்யப்பட்டு, உடற்தகுதி பெற்றுவிட்டதற்கான ஒப்புதலை பெற வேண்டும். அதற்கு அவர் பெங்களூர் சென்றுள்ளார். ஆனால், அவரை பரிசோதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது அந்த அகாடமி.

டிராவிட் என்ன சொன்னார்?
அந்த அகாடமியின் தலைவர் டிராவிட், பும்ராவிடம் தேசிய கிரிக்கெட் அகாடமி பரிசோதனை செய்யாது என மரியாதையாக கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. பும்ரா வெளியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடற்தகுதிக்கு நாங்கள் எப்படி ஒப்புதல் அளிக்க முடியும் என்பதே அந்த அகாடமியின் பார்வையாக உள்ளது.

டிராவிட் காரணம் இல்லை
இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் காரணம், தேசிய கிரிக்கெட் அகாடமியின் சிகிச்சை மீது இந்திய வீரர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது தான். டிராவிட் சில மாதங்கள் முன்பு தான் அந்த அகாடமியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கே இருக்கும் குறைபாடுகளுக்கு அவர் நேரடியாக காரணம் இல்லை என்றாலும், விரைவில் அவர் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications